ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் அரசாங்கத்தின் கொடூரமான திட்டங்களால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் நசுக்கப்படுகிறது. மறுபுறம் இந்துத்துவா கும்பல்களால், அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடமைகள் சூரையாடப்படுகிறது.
தற்போது பா.ஜ.க ஆட்சி நடந்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில், மசூதிமீது காவிக் கொடியேற்றி இந்துத்துவா கும்பல் அராஜகபோக்குடன் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அலகாபாத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, ஆர்எஸ்எஸ் - பாஜகவிற்கு நெருக்கமான சுஹல்தேவ் சுரக்ஷா சமான் மன்ச் என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்.
அப்போது, இந்த குண்டர்கள் சிக்கந்தராவில் உள்ள சையத் சலார் ஹாஜி தர்ஹா மீது ஏறி “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷங்களை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் மசூதி மேல் இருந்த பச்சைவண்ண கொடியை அகற்றி, காவி வண்ண கொடியை ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
அதேபோல், பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் ராம நவமி ஒத்திகை சம்பவம் என்ற பெயரில் இந்துத்துவா குண்டர்கள் பாறைகளைத் தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க செய்தனர்.
இப்படி பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. ஆனால் இதை கட்டுப்படுத்தாமல் அம்மாநில முதலமைச்சர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.