நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர் நவ. 25 ஆம் தேதி தொடங்கி இன்றுவரை நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு கூட்டத் தொடர் நடைபெற்றாலும் எதிர்க்கட்சிகளை பேசவிடாமலே இந்த கூட்டத் தொடரை ஒன்றிய அரசு முடித்துள்ளது.
குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டையொட்டி குடியரசு தலைவர் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களும் அரசியலமைப்பு சட்டத்தின் 75 ஆவது ஆண்டு குறித்து பேச வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து 2 நாட்கள் அரசியலமைப்பு சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனங்களுக்கு மத்தியில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதா தாக்கல் செய்த அடுத்த நாளே அம்பேத்கர் குறித்து ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலும் இந்தியா கூட்டணி எம்.பிகள் தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ”நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் (டிசம்பர் 20) நிறைவடையலாம். ஆனால், சிக்கல்கள் நிறைவடையாது. அம்பேத்கருக்கு இழைக்கப்பட்டுள்ள அவமதிப்பு கடும் கண்டனத்திற்குரியது. அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் வலுவிழக்க செய்வதே பா.ஜ.க.வின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.” என விமர்சித்துள்ளார்.