மக்களவையில் இன்று, கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கு தேசிய சுகாதார இயக்கம் (NHM) பங்களிக்கும்விதம் பற்றி விளக்கம் கேட்டு கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி. டி. மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய மலையரசன் எம்.பி.,"மிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் NHM-ன் கீழ் ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதியின் அளவு, தாய் சேய் நலத்தை மேம்படுத்துதல், நோய்த்தடுப்பு மற்றும் நோய் கட்டுப்பாடு ஆகியவற்றில் தேசிய சுகாதார இயக்கம் முன்னெடுத்த திட்டங்களின் முன்னேற்றங்கள், தொலைதூர/ கிராமப்புற பகுதிகளில் NHM-ன் கீழ் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள்,
மொபைல் சுகாதார சேவைகள் மற்றும் சுகாதார முகாம்கள் ஆகியவற்றின் பங்கு, மலைப்பகுதிகளில் சுகாதார சேவைகளை கொண்டு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள், மோசமான சுகாதார நிலை உள்ளா மாவட்டங்களில் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட / முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவான பதிலை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளார்.
அதேபோல், நாட்டில் உள்ள நூலகங்களின் தரத்தை உயர்த்தவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து திமுக வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த் நாடாளுமன்ற மக்களவையில் பின்வரும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய கதிர் ஆனந்த் எம்.பி, ”நாட்டில் உள்ள நூலகங்களின் தரத்தை உயர்த்தவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் யாவை?.நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தின் கீழ், தமிழ்நாடு உட்பட நாட்டில், மாநில வாரியாக, மத்திய நூலகங்கள் மற்றும் மாவட்ட நூலகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
நாட்டில் நூலகங்களை அமைப்பதற்காக இதுவரை வழங்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதி உதவி விவரங்கள் யாவை?. தமிழ் நாட்டில் சரஸ்வதி மஹால் நூலகம் மற்றும் உலகப் புகழ்பெற்ற சென்னை கன்னிமாரா நூலகக் கட்டிடத்தின் வளர்ச்சி, மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளதா, இல்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.