இந்தியா

கோட்டா : நீட் தேர்வால் தொடரும் சோகம் - 3 மாதங்களில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த முகமது உரூஜ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோட்டா : நீட் தேர்வால் தொடரும் சோகம் - 3 மாதங்களில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்து கொண்டிருக்கும்போதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம், தற்போது பல்வேறு மாநிலங்களும் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.

நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தனியார் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மையங்கள் லட்ச கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன. மேலும், அங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகப்படியான மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கோட்டா : நீட் தேர்வால் தொடரும் சோகம் - 3 மாதங்களில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரானது தனியார் தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு IIT, NEET போன்ற பல்வேறு படிப்புகளுக்கு பயிற்சி மையங்கள் இருக்கிறது. இந்த பகுதியில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த சூழலில் இங்கு கடந்த சில வருடங்களாக நீட் போன்ற தேர்வுகளுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது மேலும் ஒரு நீட் மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோட்டா : நீட் தேர்வால் தொடரும் சோகம் - 3 மாதங்களில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

உத்தப் பிரதேச மாநிலம் கனோஜ் என்ற கிராமத்ததை சேர்ந்த முகமது உரூஜ் என்ற மாணவர் விக்யான் நகர் என்ற இடத்தில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்றைய முன்தினம் (25.03.2024) காலை தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில், மாணவர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து இவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டா நகரில் கடந்த 3 மாதங்களில் மட்டும் முகமது உரூஜை சேர்த்து 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே போல் கடந்த ஆண்டு (2023) மட்டும் கோட்டா நகரில் சுமார் 27 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

மேலும் 2015-ம் ஆண்டு முதல் இப்போது வரை சுமார் 128 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து எத்தனை பலிகள் விழுந்தாலும், நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய பாஜக அரசு மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டு வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோட்டா : நீட் தேர்வால் தொடரும் சோகம் - 3 மாதங்களில் 6 மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

banner

Related Stories

Related Stories