நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.
ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
இதன்படி நேற்று மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று தி.மு.க கனிமொழி எம்.பி பேசுகையில், "மணிப்பூர் விவகாரம் தேசத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. வன்முறையில் 170க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை வேடிக்கை பார்க்கும் நிலையில் பா.ஜ.கவின் இரட்டை என்ஜின் அரசு உள்ளது.
பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தடுக்க மாநில பா.ஜ.க அரசு தவறி விட்டது. இரட்டை என்ஜின் அரசு மக்களைக் கொல்லும் இருமுனை கொண்ட ஆயுதமாக மாறிவிட்டது.
3 மாதங்கள் கடந்தும் மணிப்பூரில் படுகொலைகளை தடுத்து நிறுத்த பிரதமர் மோடி தவறிவிட்டார். அதேபோல் அம்மாநில முதலமைச்சரும் தவறிவிட்டார். மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதமர் மோடி சந்திக்க ஏன் செல்லவில்லை?
இந்தியா கூட்டணி எம்.பிக்கள் பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் தங்கியிருந்த முகாம்களுக்குச் சென்று சந்தித்துப் பேசினோம். அப்போது அவர்கள், "நீங்கள் எங்களைப் பார்க்க வந்துள்ளீர்கள். ஆனால் எங்கள் மாநில முதல்வரும், பிரதமரும் ஏன் வரவில்லை" என பெண்கள் எங்களிடம் கேட்டனர்.
மணிப்பூரில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையிலும், மனிதர்கள் வாழத்தகுதியற்ற நிலையிலும் உள்ளது. வன்முறை காரணமாக அங்கு வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; பீதியடைந்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து அது சோழர் பரம்பரையிலிருந்து வந்ததாகக் கூறினீர்கள். கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா?. எங்கள் மீது இந்தியைத் திணிக்காதீர்கள். சிலப்பதிகாரத்தைப் படியுங்கள். அதில் உங்களுக்கான பாடம் நிறைய உள்ளது" என தெரிவித்துள்ளார்.