நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு பேச வேண்டும் என வலியுறுத்த இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசும் போது பா.ஜ.கவினர் குறுக்கிட்டு கூச்சல் குழப்பம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி, "பா.ஜ.கவினர் பயப்படத் தேவையில்லை. இன்று நான் அதானியைப் பற்றிப் பேச மாட்டேன். எனவே பா.ஜ.கவினர் அஞ்ச வேண்டாம்" என தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, உண்மையான இந்தியாவை எனது ஒற்றுமை நடைபயணத்தில் பார்த்தேன். இந்த நடைபயணத்தை தொடங்கும் போது எனக்கு முதலில் அச்சம் இருந்தது. ஆனால் நடைபயணத்தில் சிறையைக் கற்றுக்கொண்டேன். இந்திய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இந்தியாவில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை நடைபயணத்தில் உணர்ந்தேன். பாஜக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.எனது நடைபயணம் முடிந்துவிடவில்லை. மீண்டும் தொடங்கும். பா.ஜ.க ஆட்சியில் நான் அவதூறுக்கும் சிறுமைப்படுத்தலுக்கும் ஆளாகி வருகிறேன். பிரதமர் மோடி விரும்பினால் நான் சிறை செல்லவும் தயார்.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நான் நேரில் சந்தித்தேன். மணிப்பூரில் பெண்கள், குழந்தைகள் என அனைவரின் கதைகளும் கொடூரமாக உள்ளது. ஆனால், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் கூட மோடி இன்னும் பேசவில்லை.
பிரதமர் மணிப்பூருக்குச் செல்லவில்லை. ஆனால் நான் சென்றேன். மகனின் சடலத்துடன் அமர்ந்திருந்த தாயைச் சந்தித்தேன். பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசினேன். பிரதமரைப் பொறுத்தவரை இந்தியாவில் மணிப்பூரில் இல்லை. நான் அதை மணிப்பூர் எனக் குறிப்பிடுகிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் அங்கு மணிப்பூர் இல்லை. பாஜக மணிப்பூரை இரண்டாகப் பிரித்துவிட்டது.
இலங்கை மன்னன் ராவணன் கூட மக்கள் பேச்சைக் கேட்டார். ஆனால் மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மகளின் குரலைப் பிரதமர் மோடி கேட்கவில்லை. மேகநாதன், கும்பகர்ணன் ஆகிய இருவரின் பேச்சை மட்டும்தான் ராவணன் கேட்டான். அப்படி மோடியும், அமித்ஷாவும் அதானி பேச்சை மட்டும்தான் கேட்கிறார்.
மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவைக் கொன்றுவிட்டதற்குச் சமம். நினைத்துப் பார்க்கவே அஞ்சும் மோசமான சம்பவங்கள் நடைபெற்றதாக முகாம்களில் உள்ள பெண்கள் தெரிவித்தனர். இந்தியாவைக் கொன்றதைப் போல, மணிப்பூரில் பாரத மாதாவையும் கொன்றுவீட்டீர்கள்.
இந்தியாவில் அடிப்படை கருத்தோட்டத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்றிய அரசு அழித்துவிட்டது. மணிப்பூரில் ராணுவத்தை பயன்படுத்தினால் ஒரே நாளில் அமைதியைக் கொண்டு வரலாம்" எனத் தெரிவித்துள்ளார்.