மத்திய பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் லெபா கிராமத்தைச் சேர்ந்தவர் தீர் சிங் தோமர். அதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திர சிங் தோமர். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையே கடந்த 2013ம் ஆண்டிலிருந்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
அப்போது கழிவுகளைக் கொட்டுவதில் இந்த இரண்டு குடும்பங்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையின்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவரை கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.பிறகு இவர்கள் கிராமத்தை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
பிறகு இந்த இரண்டு குடும்பத்தினரும் இடையே சமரசம் செய்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் மிண்டும் கிராமத்திற்கு இன்று வந்துள்ளனர். அப்போது பழிவாங்கும் நோக்கத்தில் காத்துக் கொண்டிருந்த தீர் சிங் தோமரின் குடும்பத்தினர் கஜேந்திர சிங் தோமரின் குடும்பத்தினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் இறந்தவர்களின் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் இரு குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பகை காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தீர் சிங் தோமரின் குடும்பத்தினரை போலிஸார் தேடிவருகின்றனர்.