புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் தனது செல்போனில் டெலிகிராம் செயலியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ‘பாண்டிச்சேரி கல்லூரி கால் கேர்ள்ஸ்’ என்று ஒரு ஆபாச குரூப் வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அந்த குரூப்பிற்குள் சென்று பார்த்துள்ளார்.
அப்போது அதில் சில பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளது. மேலும் இவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கப் பணம் செலுத்தினால் அனுப்பி வைக்கப்படும் என இருந்துள்ளது. இப்படியே ஒவ்வொரு படமாக அந்த நபர் பார்த்து வந்தபோது அதில் தனது சகோதரியின் புகைப்படம், அவருக்கு வேறு பெயரும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் இது குறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஆய்வாளர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் பெண்கள் படத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தது தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை செய்ததில், அரவிந்தன் இது போன்ற செயலியில் கல்லூரி மாணவிகளின் புகைப்படங்களைப் பதிவேற்றி ஆன்லைன் (UPi) மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதன் பின்னர் அந்த செயலியில் பணம் அனுப்பியவர்களின் எண்ணை பிளாக் செய்து மோசடி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.