உத்தர பிரதேச மாநிலம், மீரட் மைதா கொகல்லாவ பகுதியைச் சேர்ந்தவர் வருண். இவரது தாய் சந்தோஷ். இவர் தனது பேத்தி ரியா அகர்வாலுடன் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
பின்னர் இருவரும் வீட்டின் அருகே வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென பாட்டி காதில் அணிந்திருந்த கம்மலை பறித்துக் கொண்டு தப்பித்துச் செல்ல முயன்றனர்.
அப்போது உடனே பேத்தி ரியா, இருசக்கர வாகனத்தைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி அவர்களுடன் சண்டைபோட்டுள்ளார். அவர்கள் தப்பிக்க முயன்றபோதும் அவர்களை விடாமல் பிடித்துக் கொண்டார்.
இதனால் வேறு வழி இல்லாமல் நகையைச் சாலையில் தூக்கி வீசி இருவரம் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தெருவிலிருந்த சி.சி.டி.வி காட்சியில் பதிவாகியுள்ளது. பிறகு இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சி.சி.டி.வி காட்சி உதவியுடன் புச்டி சாலையில் பதுங்கி இருந்த மர்ம நபர்களை போலிஸார் சுற்றிவளைத்தனர். அப்போது தப்பிக்க முயன்ற அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்கொண்ட ரியா அகர்வாலுக்கு பொதுமக்கள், போலிஸார் என பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.