குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. 6 முறையாகப் பெற்றி பெற்று தொர்ந்து ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் இந்திய அளவில் கவனிக்கப்படக் கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாகவும் குஜராத் மாநில தேர்தல் இருக்கப்போகிறது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்தமுறையாவது எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும், குஜராத்தில் தங்கள் செல்வாக்கை வலுவாகப் பதிய வைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியும் தீவிரமாகத் தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தலுக்கு போட்டியிட உள்ள பா.ஜ.க வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 38 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதற்குப் பதில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சிக்கு எதிராகவே தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளனர்.
இதை உறுதி செய்யும் விதமாக முன்னாள் எம்எல்ஏவும், பா.ஜ.க கட்சியின் பழங்குடியின பிரிவு தலைவருமான ஹர்ஷத் வாசவா தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இவர் நந்தோட் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளார். மேலும் 6 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற மது ஸ்ரீவசத்சவ்க்கு இந்த முறை சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அவரும் பா.ஜ.கவுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட உள்ளார்.
மேலும் தினேஷ் படேல், சதீஸ் படேல், அர்விந்த் லதானி ஆகியோரும் சுயேச்சையாக போட்டியிட போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படி மூத்த நிர்வாகிகளே கட்சிக்கு எதிராகப் போட்டியிட உள்ளதால் பா.ஜ.கவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.