உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மகாராஜபூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ப்ரகேஷ் சிங். பொதுவாக காவலர்கள் இரவுப்பணிக்கு தயங்கும் நிலையில், இவர் தனக்கு இரவுப்பணி வழங்குமாறு மேலதிகாரிகளிடம் கூறி இரவுப்பணியில் தொடர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
அதேசமயம் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் சைக்கிள்கள் காணாமல் போவது, பைக்குகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்கள் திருடுப் போவது, செல்போன்கள் மாயமாவது போன்ற திருட்டு சம்பவங்கள் அந்த பகுதியில் அதிகரித்து வந்தன.
இதன் காரணமாக இரவுப்பணிக்கு செல்லும் ப்ரகேஷ் சிங் சரியாக பணிபுரியவில்லை என மேலதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. இதன் காரணமாக அவரை ரகசியமாக கண்காணிக்கத்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடைக்கு வெளியே படுத்துக் கொண்டிருந்த இளைஞரின் விலை உயர்ந்த செல்போன் திருடப்பட்டதாக போலிஸாருக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை வைத்து சோதனை நடத்திய போலிஸாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இரவுப்பணிக்கு செல்லும் காவலர் ப்ரகேஷ் சிங்தான் அந்த விலை உயர்ந்த செல்போனை திருடியதை போலிஸார் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் இரவுப்பணிக்கு சென்று இதுபோன்ற தொடர்ச்சியான திருட்டு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக அவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைந்தனர். போலிஸ் ஒருவரே தொடர்ந்து கொள்ளை செயலில் ஈடுபட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.