ஒடிசா மாநிலம், பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர் அங்கட் கன்ஹர். இவர் புல்பானி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாகப் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுள்ளார்.
இதையடுத்து 1984 ஆண்டில் பஞ்சாயத்துத் தேர்தல் மூலம் தனது அரசியல் வாழ்க்கையில் நுழைந்துள்ளார். இதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது கல்வியை மீண்டும் தொடர வேண்டும் என நினைத்து வந்துள்ளார்.
இதன் பின்னர் இந்த ஆண்டு நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுவது என முடிவு செய்து அதற்காக விண்ணப்பித்துள்ளார். பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினார்.
இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 500க்கு 364 மதிப்பெண்கள் பெற்று அங்கட் கன்ஹர் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த வெற்றியால் நான் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் இருப்பதாக அங்கட் கன்ஹர் தெரிவித்துள்ளார்.
மேலும் எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. தேர்வு எழுத வயது ஒரு தடையில்லை. கல்வி கற்கவும் தடையில்லை. எல்லாராலும் இது முடியும் என்றும் அங்கட் கன்ஹர் தெரிவித்துள்ளார்.