இந்தியா

‘வரதட்சணை கொடுமையே தற்கொலைக்கு காரணம்’ : கேரளாவை உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!

கேரளாவை சேர்ந்த மருத்துவ மனைவி தற்கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

‘வரதட்சணை கொடுமையே தற்கொலைக்கு காரணம்’ : கேரளாவை உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கேரளாவைச் சேர்ந்த அரசு ஊழியராக இருந்த கிரண் குமார் என்பவருக்கும் மருத்துவ மாணவியான விஸ்மயா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, மணப்பெண்ணின் பெற்றோர் 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வழங்கினர்.

இவ்வளவு வரதட்சணை பெற்றும், கிரண் குமார், மனைவி விஸ்மயாவிடம் கூடுதல் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இந்நிலையில், மனமுடைந்த விஸ்மயா, ஜூன் 21ஆம் தேதியன்று தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து இவரின் தற்கொலை கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வழக்கு தொடர்பான தொடர் விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கிரண் குமார் போக்குவரத்துறையில் ஊழியராக இருந்தால், இவர் மீது போக்குவரத்துத்துறை விசாரணை நடத்தி அவரை அரசு பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ அறிவித்தார்.

இதனையடுத்து, கேரளாவில் வரதட்சணை கொடுமையைத் தடுக்கும் விதமாக, அரசு ஊழியர்கள் 'வரதட்சணை வாங்கவில்லை' என மனைவியின் பெற்றோரிடத்தில் கையொப்பம் பெற்ற சான்றிதழ்யை சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி சுஜித் கே.என் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின்போது நீதிபதி 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுக்கொண்டார்.

மேலும் காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்த நிலையில், அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில்,கிரண் குமார் குற்றவாளி என்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அந்த வழக்கில், “விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கபடுகிறது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்குத்தொடர்பான விவரங்கள், தண்டனை நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

banner

Related Stories

Related Stories