இந்தியா

“திரும்பத் திரும்ப தப்பு பண்றீங்க.. ஆனா, ஜெயிக்கவே முடியாது”: அமித்ஷாவை எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

” 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

“திரும்பத் திரும்ப தப்பு பண்றீங்க.. ஆனா, ஜெயிக்கவே முடியாது”: அமித்ஷாவை எச்சரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

இருப்பினும் பா.ஜ.க பல்வேறு வடிவில் இந்தியை திணிக்க தொடந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் வெளிப்பாடாகவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு அமைந்துள்ளது.

டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பா.ஜ.க தலைமை தொடர்ந்து செய்கிறது.

'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது!

ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது!

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories