இந்தியா

“இனி உங்க தாய்மொழிலயே ட்வீட் போடுங்க மேடம்” : அமித்ஷாவுக்கு முட்டுக் கொடுக்க வந்து மாட்டிக்கொண்ட காயத்ரி!

பா.ஜ.கவின் காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்வீட்டுக்கு சமூகவலைதளவாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

“இனி உங்க தாய்மொழிலயே ட்வீட் போடுங்க மேடம்” : அமித்ஷாவுக்கு முட்டுக் கொடுக்க வந்து மாட்டிக்கொண்ட காயத்ரி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.கவின் காயத்ரி ரகுராம் பதிவிட்ட ட்வீட்டுக்கு சமூகவலைதளவாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வலுவாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி, கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் பா.ஜ.க நிர்வாகி காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலம் என்பது எனது தேசிய மொழியும் அல்ல, தாய் மொழியும் அல்ல. இந்தி என்பது இந்திய மொழி. நாட்டின் பொதுவான மொழியாகும்.

வடமாநிலங்களில் இந்தி பரவலாக பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் கூட ஹைதராபாத், திருவனந்தபுரம், உடுப்பி, சவுகார்பேட்டையில் திராவிடர்கள் இந்தி பேசுகிறார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த ட்வீட்டுக்கு சமூகவலைதளவாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.

“இந்தியும் உங்கள் தாய் மொழி இல்லையே? இதை சொல்வதற்கு ஆங்கிலம் உங்களுக்கு தேவைப்படுகிறது. இனி வரும் பதிவுகளை தயவுசெய்து இந்தி (அ) சமஸ்கிருதத்தில் மட்டும் பதிவிடுங்கள்” எனப் பலரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories