பீகார் மாநிலத்தில் பா.ஜ.க-வின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆளுங்கட்சி மீது பா.ஜ.க எம்.எல்.ஏ ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது கூட்டணிக் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல்தான் நிதிஷ்குமார் அரசு மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆளும் கட்சி ஊழலில் சிக்கியுள்ளது. இதற்கு அதிகாரிகளும் துணை நிற்கிறார்கள். ஒரு ஊழல் வழக்கு குறித்து முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் புகார் கொடுத்தேன். ஆனால் இது குறித்து அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நான் ஆட்சி செய்யும் கட்சியின், கூட்டணி கட்சியிலிருந்தாலும் கருத்துக்களைத் தெரிவிக்க எனக்கு உரிமை உண்டு. தற்போது நான் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளேன். இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், பெரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என தெரிவித்துள்ளார்.
நிதிஷ்குமார் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டை பா.ஜ.க எம்.எல்.ஏ கூறுவதன் மூலம் அங்கு, ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, பா.ஜ.க-வினரே முதல்வராக வருவதற்கு சதி செய்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.