இந்தியா

“மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவதும் பாலியல் வன்கொடுமைதான்”: ஐகோர்ட்டு அதிரடி !

கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டால் அது பாலியல் வன்கொடுமை தான் என கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

“மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவதும் பாலியல் வன்கொடுமைதான்”: ஐகோர்ட்டு அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் மனைவியுடன் கணவன் கட்டாய பாலியல் உறவில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்பவங்கள் தொடர்பாக தனது கணவர் மீது மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள சிறப்பு சலுகை மூலம் தண்டனைகள் எதுவும் கிடைப்பதில்லை.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 375-ல் ஆண் தனது மனைவியுடன் கட்டாய உடல் உறவில் ஈடுபட்டாலும் அந்த பெண்ணின் வயது 15-க்கு மேல் இருந்தால் அது பாலியல் வன்கொடுமையாக கருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டப்பிரிவில் உள்ள சிறப்பு சலுகையால் மனைவியை கணவன் கட்டாய பாலியல் வன்கொடுமை செய்தாலும் இது குற்றமாக கருத்தப்படுவதில்லை. இந்நிலையில், கணவனாக இருந்தாலும் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துக் கொண்டால் அது பாலியல் வன்கொடுமை தான் என கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவன் தன்னை பாலியல் அடிமை போன்று நடத்துவதாகவும், கட்டாய உடல் உறவு மற்றும் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யும்படியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றுதொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பெண்ணின் கணவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அந்த பெண்ணின் கணவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, பெண்ணின் கணவன் மீது பதியப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.

மேலும், திருமணம் என்பது பெண்களுக்கு எதிராக காட்டுமிராண்டிதனமான செயல்களை கட்டவிழ்த்து விடுவதற்கான உரிமம் அல்ல. திருமணத்தினால் மட்டும் ஆணுக்கு சிறப்பு உரிமை எதுவும் கிடைத்துவிடாது. மனைவியின் உடல், ஆன்மா மீது கணவனே ஆளுகை செலுத்துகிறவனாக இருக்க வேண்டும் என்ற பழமைவாத சிந்தனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

மனைவியின் சம்மதமின்றி கணவன் பாலியல் ரீதியாக அத்துமீறுவது மனைவிக்கு உடல் மற்றும் உளவியல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சட்டத்தை உருவாகும் இடத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற பாதிப்புகளை களைய நடவடிக்கை எடுப்பது அவசியம் திருமணத்திற்கு பிந்தைய கட்டாய உறவு, பலாத்காரமா இல்லையா என்பதை சட்டத்தை இயற்றுபவர்களை முடிவு செய்ய வேண்டும் என்றாலும் மனைவி பலாத்கார புகார் கூறினால் அதனை கணவன் எதிர்கொள்ள வேண்டியது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories