இந்தியா

பங்கு சந்தை முக்கிய முடிவுகளில் ஆலோசனை.. இமயமலை சாமியாருடம் கூட்டு சேர்ந்த NSE இயக்குநர் : ‘SEBI’ அதிரடி!

அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனையில் ஈடுபட்ட NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் 3 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

பங்கு சந்தை முக்கிய முடிவுகளில் ஆலோசனை.. இமயமலை சாமியாருடம் கூட்டு சேர்ந்த NSE இயக்குநர் : ‘SEBI’ அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேசிய பங்கு சந்தை (NSE) நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி வருபவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் NSE நிர்வாக இயக்குநராக இருந்த காலக் கட்டத்தில், குறிப்பாக, 2013 முதல் 2016ம் ஆண்டு வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதனையடுத்து பல்வேறு புகாரைத் தொடர்ந்து பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ இதுதொடர்பான புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, விசாரித்ததில் தற்போது பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பங்கு சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அடையாளம் தெரியாத மர்ம சாமியாரின் ஆலோசனையை கேட்டு சித்ரா ராமகிருஷ்ணம் முடிவு எடுத்துள்ளதாக அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இமயமலையில் இருப்பதாகக் கூறப்படும் மர்ம சாமியார், ரிக், யஜூர், சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கியுள்ள இ-மெயில் ஐடிக்கு பங்குச் சந்தை தொடர்பாக முக்கிய தகவலை அனுப்பி உள்ளதையும், அதே மெயில் ஐடி-யிலிருந்து ஆலோசனை கிடைத்த பின் அதன்படி முடிவுகள் எடுத்து வந்துள்ளதாகவும் செபி கண்டுப்பிடித்துள்ளது.

அதுமட்டுமல்லாது, மர்ம சாமியாரின் வழிகாட்டுதல் படி 2013-ம் ஆண்டின் NSE ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு அடுத்தடுத்து 3 சம்பள உயர்வு அளித்து 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாகவும் செபி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இதுதொடர்பாக புகார் மீது தற்போது வரை நடந்த முதற்கட்ட விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.2 கோடியும் அபராதம் விதித்து, இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தேசிய பங்கு சந்தையின் முக்கிய முடிவுகளை NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மேற்கொண்டது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories