ஆசை பட பாணியில் மனைவியை தங்கையிடம் கல்யாணம் செய்ய வற்புறுத்தியும் சம்மதிக்காததால் அவரை கடத்திய சம்பவம் தும்கூர் பகுதியில் அரங்கேறியிருக்கிறது.
தும்கூரைச் சேர்ந்த 32 வயதான தொழிலதிபர் ஒருவர் அவரது மச்சினியை ஆட்களை வைத்து கடந்த ஜனவரி 25ம் தேதி கடத்தியிருக்கிறார்.
பணி முடிந்து தன்னுடைய பெண் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த பெண்ணின் தந்தை போலிஸில் புகாரளித்திருக்கிறார். புகாரின் பேரில் அலுவலகத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்ததில் அவர் கடத்தப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து கடந்த ஞாயிறன்று போலிஸார் பெண்ணை மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்தான் திடுக்கிடும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தும்கூரைச் சேர்ந்த தொழிலதிபரான தேவராஜ் பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை மணந்துள்ளார்.
அதன் பிறகு அவரது தங்கையுடன் பழகி வந்திருக்கிறார் தேவராஜ். அவரும் நெருக்கமாக பழகியிருக்கிறாராம். பின்னர் தேவராஜின் செயல்களில் சந்தேகமடைந்து அவரது மனைவி அவரை விட்டு விலகியிருக்கிறார்.
தனது அக்கா தேவராஜிடம் இருந்து விலகியதை அடுத்து அவரது தங்கையும் தேவராஜுடன் பழகுவதை நிறுத்தியிருக்கிறார். இப்படி இருக்கையில் தன்னுடன் தொடர்ந்து பழகும் படியும் கல்யாணம் செய்துக்கொள்ளும்படியும் தேவராஜ் வற்புறுத்தியிருக்கிறார்.
அவரது தொந்தரவில் இருந்து தப்பிக்க பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போதுதான் அந்த பெண்ணை கடத்தும் செயலில் தேவராஜ் ஈடுபட்டிருக்கிறார்.
தற்போது தேவராஜையும் கடத்தல் வேலைக்கு உதவிய இருவரையும் தும்கூர் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.