மும்பை நகரத்தில் உள்ள மல்வானி பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் குன்னார். இவர் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி தனது வீட்டில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டு கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஃயீப் அலி, குன்னார் வீட்டிற்கு வந்து சத்தத்தைக் குறைத்து வைத்துப் பாட்டு கேட்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் குன்னார் இதற்கு மறுப்பு தெரிவித்து நான் அப்படித்தான் பாடல் கேட்பேன் என கூறி அதிக சத்தத்துடன் பாட்டுக் கேட்டிருக்கிறார்.
இதனால், ஆத்திரமடைந்த சஃயீப் அலி, குன்னாரை பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த சஃயீப் அலியைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.