ஒமைக்ரான் பாதித்த நாடுகளிலிருந்து வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, பெல்ஜியம், தென் ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி லோக்நாயக் மருத்துவக் கல்லூரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை வழங்க தனி மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் 3476 சர்வதேச பயணிகளிடம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது.
இதனிடையே, இன்று மாலை கொரோனா மேலாண்மை குழு நீண்ட இடைவேளைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து நிலமையை விளக்க உள்ளனர்.