இந்தியா

சிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு!

சிறுநீரக கற்களுக்குப் பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை மருத்துவர் அகற்றிய சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுநீரக கல்லுக்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்... நுகர்வோர் ஆணையத்தின் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குஜராத் மாநிலத்தில் சிறுநீரக கற்களுக்குப் பதிலாக நோயாளியின் சிறுநீரகத்தை மருத்துவர் அகற்றிய சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகம் ரூ.11.23 லட்சம் இழப்பீட்டை 2012 முதல் ஆண்டுக்கு 7.5% வட்டி கணக்கிட்டு சேர்த்து வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தின் வன்க்ரோலி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரபாய் ரவால் என்பவர், கடுமையான முதுகு வலி மற்றும் சிறுநீர் கழிக்கும்போது சிரமம் ஆகிய பிரச்சனைகள் இருந்ததால் கடந்த 2011ஆம் ஆண்டு பாலசினோர் நகரில் உள்ள கே.எம்.ஜி பொது மருத்துவமனைக்குச் சென்றார்.

அந்த மருத்துவமனையில், தேவேந்திரபாய் ராவலின் இடது சிறுநீரகத்தில் 14 மி.மீ அளவில் கல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, அவர் அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தார். செப்டம்பர் 3, 2011 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆனால், சிறுநீரக கல்லுக்குப் பதிலாக, சிறுநீரகத்தையே அகற்றியிள்ளார் அறுவை சிகிச்சை மருத்துவர். நோயாளியின் நலன் கருதி சிறுநீரகம் அகற்றப்பட்டதாக அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர் கூறியுள்ளார்.

சில நாட்களிலேயே சிறுநீர் கழிப்பதில் ராவலுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருகேயுள்ள சிறுநீரக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், அவர் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜனவரி 2012ல் பலியானார்.

இதையடுத்து ராவலின் மனைவி மினபென், நாடியாட்டில் உள்ள நுகர்வோர் ஆணையத்தை அணுகினார். இந்த புகாரை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் 2012 இல் மருத்துவர், மருத்துவமனை மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ லிமிடெட் மருத்துவ விதிகளின் கவனக்குறைவுக்காக 11.23 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.

மருத்துவமனை மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றில் யார் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இழப்பீடு வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து மாநில நுகர்வோர் ஆணையத்தை அணுகினர்.

விசாரித்த மாநில நுகர்வோர் ஆணையம், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் மருத்துவ அலட்சியத்திற்கு காப்பீட்டாளர் பொறுப்பல்ல. அறுவை சிகிச்சையின்போது சிறுநீரக கல்லை அகற்றுவதற்காக மட்டுமே ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் சிறுநீரகம் அகற்றப்பட்டது. எனவே, இது மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் அலட்சியத்தினால் நிகழ்ந்தது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் ரூ. 11.23 லட்சம் அபராதத்தை 2012ஆம் ஆண்டு முதல் 7.5% வட்டியோடு சேர்த்து இழப்பீடாக வழங்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories