இந்தியா

“படுதோல்விப் பாதையில் பா.ஜ.க” : மோடிக்கு கிலி ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள்!

மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று காவிகள் போட்ட கருப்புத் திட்டங்கள் அத்தனையும் காலி.

“படுதோல்விப் பாதையில் பா.ஜ.க” : மோடிக்கு கிலி ஏற்படுத்திய தேர்தல் முடிவுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘குஜராத்தின் காந்தி நகர் உள்ளாட்சித் தேர்தலில் வென்ற பா.ஜ.கவுக்கு வாழ்த்துகள்’ என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவைக் கண்ட அரசியல் விமர்சகர்களுக்கு ஆச்சரியம்.

சாதாரண உள்ளாட்சித் தேர்தலில் ஓர் ஊரில் ஜெயித்ததற்கு நாட்டின் பிரதமரே, அவரது அதிகாரப்பூர்வமான சமூகவலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கிறாரே, ஒருவேளை அவரது சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இருக்கலாமோ என்று கருதினார்கள்.

ஆனால் – உண்மை அதுவா?

இம்மாதத்தின் தொடக்கத்திலேயே மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாஜகவுக்கு படுதோல்வி. மம்தா பானர்ஜியை தோற்கடித்து, மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று காவிகள் போட்ட கருப்புத் திட்டங்கள் அத்தனையும் காலி.

குஜராத் உள்ளாட்சியிலுமே கூட பன்வாத் போன்ற நகராட்சிகளை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஆளுங்கட்சியாக தேர்தலை சந்தித்த பா.ஜ.க, களத்தில் சவாலான நிலையையே சந்தித்தது. உள்ளாட்சித் தேர்தலிலேயே காங்கிரசுக்கும், தனக்குமான வாக்கு வித்தியாசம் குறைவாகதான் இருக்கிறது என்பதை அக்கட்சி உணர்ந்திருக்கிறது. பெருவாரியான இடங்களை கைப்பற்றியிருப்பதாகக் கணக்குக் காட்டினாலும், இந்த வெற்றியை எட்டுவதற்குள்ளாகவே அக்கட்சியினருக்கு தாவு தீர்ந்துவிட்டது.

போதாக்குறைக்கு மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலிலும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து பெரும்பாலான இடங்களை கொத்திக்கொண்டு போக, பா.ஜ.க சொற்ப இடங்களையே கைப்பற்றியிருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூர் மாவட்டத்தில் 16 ஜில்லா பரிஷத் இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 11, பா.ஜ.க 3, மற்றவர்கள் 2 என்று தேர்தல் முடிவு அமைந்திருக்கிறது. 31 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும் கூட பா.ஜ.கவுக்கு 5 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. மீதமுள்ள இடங்களை காங்கிரஸ் கூட்டணி வென்றிருக்கிறது.

விவசாயிகள் போராட்டத்தை அடக்குவதில் ரவுடித்தனமான கொலைக்கார அணுகுமுறை, ஒன்றிய அரசால் எரிபொருள் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாத கையாலாகாத்தன்மை, கொரோனாவை கையாளுவதில் குளறுபடிகள் என்று தொடர்ச்சியாக பா.ஜ.கவின் இமேஜ், வட இந்தியாவில் சரிந்துகொண்டே போகிறது.

ஏற்கனவே தென்னிந்தியாவில் கர்நாடகம் தவிர்த்து வேறேங்கும் தாமரையை மலரவே வைக்க முடியாது என்கிற நிலையில் வட இந்தியாவும் தன்னை கைவிட்டுக் கொண்டிருப்பதை மோடியும் உணர்ந்திருக்கிறார். எனவேதான் உள்ளாட்சியில் அங்கு வெற்றி, இங்கு வெற்றியென்று தொண்டர்களை உற்சாகப்படுத்துவதாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஆண்டு மார்ச்சில் 5 மாநிலங்கள், நவம்பரில் 2 மாநிலங்கள் என்று சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், அவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை எட்டமுடியாமல் போனால் 2024ல் ஒன்றிய ஆட்சியை பாஜக இழப்பது உறுதி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

- Team Stalin

banner

Related Stories

Related Stories