மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் ஆரே பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி சிங். மூதாட்டியான இவர் தனது வீட்டு தோட்டத்தில் தினந்தோறும் ஓய்வெடுப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த புதனன்று இரவு தோட்டத்திற்கு வந்து அமர்ந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன்னிடம் இருந்து கைத்தடியால் சிறுத்தையைப் பலமாகத் தாக்கியுள்ளார்.
இதையடுத்து சிறுத்தை உடனே புதருக்குள் ஓடிச் சென்று மறைந்துவிட்டது. பிறகு மூதாட்டியின் சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் காயங்களுடன் இருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிறுத்தையை வீரத்துடன் எதிர்கொண்ட மூதாட்டிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சிறுவனை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. அப்போது வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சிறுத்தையிடம் இருந்து சிறுவனை மீட்டு வந்தார்.
தற்போது மீண்டும் மூதாட்டி ஒருவரை சிறுத்தை தாக்கியுள்ளது. ஆரே குடியிருப்பு பகுதி, வனப்பகுதிக்கு அருகிலேயே இருப்பதால் அடிக்கடி சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வெளியேவந்து மக்களை அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.