இந்தியா

“உயரத்தில் கிடைத்த ஓர் உயரிய ஞாபகம்!” - தயாநிதி மாறன் எம்.பி நெகிழ்ச்சி!

மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கு விமான பயணத்தின்போது ஒரு நபர் ஆச்சரியம் அளித்துள்ளார்.

“உயரத்தில் கிடைத்த ஓர் உயரிய ஞாபகம்!” - தயாநிதி மாறன் எம்.பி நெகிழ்ச்சி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய சென்னை தி.மு.க எம்.பி தயாநிதி மாறனுக்கு விமான பயணத்தின்போது ஒரு நபர் ஆச்சரியம் அளித்துள்ளார். அது நினைவில் நின்ற பயணம் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் தயாநிதி மாறன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இன்று நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது "நீங்களும் இதே விமானத்தில்தான் வருகிறீர்களா?" என்று விமானி உடையிலிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் முகக் கவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாக தெரிந்தது.

நானும் தலையசைத்தபடி யார் அவர் என யோசித்தேன். அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முக கவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது.

"ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை" என்றார் வியப்போடு. பிறகுதான் தெரிந்தது, அவர் என்னுடைய சகாவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் ஒன்றிய வர்த்தக அமைச்சராக பணியாற்றிய போது அதே துறையின் இணையமைச்சராக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான ராஜீவ் பிரதாப் ரூடி என!

இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரிடம் மகிழ்ச்சியுடன் "நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி "ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானி" என்றார்.

எனது இனிய நண்பரும் சகாவும் ஒரு விமானியாக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன். உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா!

நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக புது டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்தமைக்கு நன்றிகள் கோடி விமானி திரு ராஜீவ் பிரதாப் ரூடி எம்.பி. அவர்களே!!” என நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories