இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. மேலும் மக்களுக்குத் தடுப்பூசி மீது இருந்த அச்சமும் தற்போது விலகி ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்த முன்வருகிறார்கள்.
இந்நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசோ மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்காமல் குறைவான தடுப்பூசிகளை ஒதுக்கி வருகிறது. மேலும் தடுப்பூசிகளை அதிகமாகக் கொள்முதல் செய்யாததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை இருந்து வருகிறது.
ஒன்றிய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தொடர்ச்சியாகப் புள்ளி விவரங்களுடன் விமர்சித்து வருகிறார். இவரது விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய அரசு ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பூசி மருந்து கிடையாது என ராகுல் காந்தி மீது எரிந்து விழுகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஒட்டுமொத்தமாகத் தடுப்பூசி செலுத்துவது குறித்துச் சுட்டிக்காட்டும் வரைபடம் ஒன்றை ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வரைபடத்தில் கொரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க ஒரு நாளைக்கு 69.5 லட்சம் டோஸ் போடவேண்டும். ஆனால் தற்போது 50.8 லட்சம் டோஸ் மட்டுமே போடப்படுகிறது எனவும் இந்த இரண்டிற்குமான இடைவெளி 27% உள்ளது அந்த வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.
இதைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இடைவெளியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எனப் பதிவிட்டு ஒன்றிய அரசுக்கு மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.