
மேற்காசிய போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா முழுவதும் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தொழில்வளமிக்க தமிழ்நாடு கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய NDA அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மோடி மறுத்து வருவது கண்டத்திற்குரியதாய் அமைந்துள்ளது.

அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி, நூறு நாள் வேலைத் திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது; கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது;
மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்கத் துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.
இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் இன்று (மார்ச் 15) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.
இதில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி தலைவர்கள், தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.






