இந்தியா

அயோத்தியில் 2 நிமிடத்தில் ₹2 கோடி நிலம் ₹18 கோடியாக உயர்வு: ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்!

ராமர் கோயிலுக்கு வாங்கிய நிலத்தில் ஊழல் நடந்துள்ளது பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., தீபக் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்

அயோத்தியில் 2 நிமிடத்தில் ₹2 கோடி நிலம் ₹18 கோடியாக உயர்வு: ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘வணக்கம் தமிழ்நாடு’ இணைய இதழில், அதன் சிறப்பு செய்தியாளர், கா.கருணாநிதி ராமர் கோவிலின் பெயரில் நடைபெற்றுள்ள மிகப்பெரும் நில மோசடியை ஆதாரங்களுடன் விளக்கி எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது.

அக்கட்டுரை வருமாறு:-

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, இமாலய மோசடிம ற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாயாஜால பரிவர்த்தனை

கடந்த மார்ச் 18 அன்று இரவு 07.10 மணிக்கு, வழிகாட்டுதல் மதிப்பான 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 12,080 சதுரமீட்டர் நிலம், இரண்டு கோடி ரூபாய்க்கு பத்திரம் பதியப்படுகிறது. குசும்பதக் மற்றும் ஹரிஷ்பதக் ஆகியோர் சுல்தான் அன்சாரி மற்றும் ரவிமோகன் அன்சாரி ஆகியோருக்கு கிரயம் செய்து கொடுக்கின்றனர். அடுத்த ஐந்து நிமிடங்களில் அதாவது 18.03.2021 இரவு 07.15 மணிக்கு, அதே நிலம் ஸ்ரீ ராம்ஜென்ம தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு, சுல்தான் அன்சாரி மற்றும் ரவிமோகன் அன்சாரி ஆகியோரிடமிருந்து 18.5 கோடி ரூபாய்க்கு கிரயம் செய்யப்படுகிறது. மேற்படி இரண்டு பத்திரப்பதிவு பரிவர்த்தனை நடவடிக்கைகளிலும், அயோத்தி மேயர் ரிஷிகேஷ் உபத்யாயா மற்றும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா, அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகிய இருவரும் சாட்சிகளாக இருந்து கையொப்பம் இட்டுள்ளனர் என்பது கூடுதல் ஆச்சரியம். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், முதல் பரிவர்த்தனைக்கான முத்திரைத்தாள் பத்திரங்கள் மாலை 05.22 மணிக்கு வாங்கப்பட்டுள்ளன. அதே நாளில் மாலை 05.11 மணிக்கு இரண்டாவது பரிவர்த்தனைக்கான முத்திரைத்தாள் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது அதைவிட ஆச்சரியத்தைத் தருகிறது. இது தொடர்பாக குற்றச்சாட்டுகள் சரமாரியாகக் கிளம்பி, லக்னோவில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, சமாஜ்வாதி கட்சித் தலைவர் பவன்பாண்டே அயோத்தியில், ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். 2 கோடி ரூபாய்க்கு நில விற்பனை பதிவு செய்யப்பட்ட அதே நாளில் அந்த நிலத்தின் ஒப்பந்தம் 18.5 கோடி ரூபாய்க்கு செய்து கொள்ளப்பட்டது என்று அவர் குற்றம்சாட்டினார்.

அதிர வைக்கும் குற்றச்சாட்டுகள்

"கடந்த மார்ச் 18 ஆம் தேதி சுமார் 10 நிமிடங்களில் முதலில் விற்பனை ஒப்பந்தமும் அதன் பின்னர் மற்றொரு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்த நிலம் 10 நிமிடங்களுக்குப் பிறகு 18 கோடி ருபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது ஏன்? ஒப்பந்தம், பத்திரப்பதிவு ஆகிய இரண்டிற்குமே அறங்காவலர் அனில் மிஷ்ரா மற்றும் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார். 2 கோடி மதிப்புள்ள நிலம் ஒரு சில நிமிடங்களில் 18.5 கோடி ரூபாய் ஆனது எப்படி என்று பவன்பாண்டே கேள்வி எழுப்பியுள்ளார். ராமர் கோயிலுக்கு நிலம் என்ற பெயரில் ராமரின் பக்தர்கள் ஏமாற்றப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேயர் மற்றும் அறங்காவலர் இருவருமே நிலத்தை வாங்குவதில் உள்ள முறைகேடுகளை அறிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த முழு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பவன் பாண்டே கோரியுள்ளார்.

10 நிமிடத்தில் நிலத்தில் தங்கம் விளைந்து விட்டதா?

"ராம ஜென்மபூமியின் நிலத்தை ஒட்டியுள்ள ஒரு நிலத்தை பூஜாரி ஹரிஷ்பதக் மற்றும் அவரது மனைவி, மார்ச் 18ஆம் தேதி மாலையில், சுல்தான் அன்சாரி மற்றும் ரவி மோகன் ஆகிய இருவருக்கும் 2 கோடி ரூபாய்க்கு விற்றனர். அதே நிலத்தை சில நிமிடங்கள் கழித்து ராம ஜன்மபூமி அறக்கட்டளைக்காக 18.5 கோடி ரூபாய்க்கு சம்பத் ராய் வாங்கினார். நான் ஊழல் குற்றச்சட்டைச் சுமத்துகிறேன். 10 நிமிடங்களுக்குள் அந்த நிலத்தில் தங்கம் விளைந்துவிட்டதா என்ன?" என்று அயோத்தியில் செய்தியாளர்களிடம் பதிவுப் பத்திரங்களைக் காண்பித்து பவன்பாண்டே கேள்வி எழுப்பினார்.

களத்தில் இறங்கிய பிற அரசியல் கட்சிகள்

இதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி., சஞ்சய் சிங், லக்னோவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ளார். "நிலத்தின் விலை, விநாடிக்கு சுமார் 5.5 இலட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல., உலகில் எந்த நிலமும் ஒரு நொடியில் இவ்வளவு விலை உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. . இந்த விவகாரத்தை உடனடியாக அமலாக்க இயக்குநரகம் மற்றும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஊழல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் நான் கோருகிறேன்" என்று அவர் தெரிவித்தார். ராமர் கோயிலுக்கு வாங்கிய நிலத்தில் ஊழல் நடந்துள்ளது பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ., தீபக் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராம ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை

இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளைச் செயலாளர் சம்பத் ராய் குறிப்பிட்டுள்ளார். "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் நிலத்தை வாங்கியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த விலையில் நிலத்தின் சொந்தக்காரர்கள் 2021 மார்ச் 20 ஆம் தேதி நிலத்தை விற்று பத்திரத்தைப் பதிவு செய்தனர். அதன் பிறகு அறக்கட்டளையுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது," என்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், விஸ்வ இந்துபரிஷத் இந்த விஷயத்தில் கருத்துத் தெரிவிக்க மறுத்து விட்டது. அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து குற்றச்சாட்டின் தன்மை கண்டறியப்படும் என்பதே விஸ்வ இந்து பரிஷத் அமைப்புடன் தொடர்புடையவர்களின் ஒரே பதிலாக உள்ளது. "சம்பத் ராய், ராம ஜென்மபூமி அறக்கட்டளை செயலாளர், இந்த குற்றச்சாட்டுகளை தங்களின் அமைப்பு, தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கண்டறியப்பட்டால், அதற்கு எதிராக ஒரு போராட்டம் தொடங்கப்படும்" என்றும் தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு மூத்த வி.எச்.பி. செயற்பாட்டாளர் கூறியுள்ளார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமானத்திற்கான ஏற்பாடுகளை மறுஆய்வு செய்வதற்காக அறக்கட்டளையின் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை அயோத்தியில் நடைபெற்றது. அறக்கட்டளை மீதான நில மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துத் தெரிவிக்க முதலில் சம்பத் ராய் மறுத்துவிட்டார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலையில் அறிக்கை வாயிலாக தமது நிலையை விளக்கியுள்ளார். இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம், தமிழர் கோவில் தமிழருக்கே என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், "வரலாற்றில் இந்து சமய ஆலயங்களை கஜினி முகம்மது மற்றும் கோரி முகம்மது ஆகியோர் கொள்ளையடித்தனர் என்றுதான் படித்திருந்தோம். ஆனால், இந்துக்கள் என்ற போர்வையில், சங்பரிவார் அமைப்புகள், ஸ்ரீராமஜென்ம பூமி போராளிகள் என்று, பொது மக்களிடம் பெற்ற நன்கொடையைக் கொள்ளையடித்துள்ள செயலை பட்டவர்த்தனமாக அரங்கேற்றியுள்ளனர்.

அயோத்தியில் 2 நிமிடத்தில் ₹2 கோடி நிலம் ₹18 கோடியாக உயர்வு: ராமர் கோவில் பெயரில் நில மோசடி அம்பலம்!

இதே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் பா.ஜ.க.வின் தமிழ்நாடு நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாட்டு கோவில்களை அபகரிக்கப் போட்ட திட்டத்தை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதுடன், தமிழர் கோவில்கள் தமிழருக்கே! என்று குரல் கொடுத்து வருகிறோம். இப்போதாவது இங்குள்ள பா.ஜ.க. பிரமுகர்கள் திடீரென இந்துக் கோவில்கள் மேல் கொண்ட அக்கறைக்கும் ஆட்டையப்போட முயற்சித்ததற்கும் காரணம் என்னவென்று தமிழ்நாட்டு மக்கள், நன்கு உணர்ந்திருப்பார்கள்" என்றனர். இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா? என்பது போல், ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை என்ற பெயரில் நடத்தியுள்ள சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டில் நடத்திடத் துடித்த பா.ஜ.க.வினருக்கு, ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பத்திரப்பதிவு மோசடி பெரும் பின்னடைவுக்கு வித்திட்டுள்ளது என்பதே நிஜம்.

ராம ஜென்ம அறக்கட்டளை ரூ.16.5 கோடிமோசடி - ஒன்றிய அரசின் பதிலென்ன?

கடந்த மார்ச் 18 அன்று இரவு 07.10 மணிக்கு, வழிகாட்டுதல் மதிப்பான 5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 12,080 சதுரமீட்டர் நிலம், இரண்டு கோடி ரூபாய்க்கு பத்திரம் பதியப்படுகிறது. குசும்பதக் மற்றும் ஹரிஷ்பதக் ஆகியோர் சுல்தான் அன்சாரிக்கு கிரயம் செய்து கொடுக்கின்றனர். அடுத்த ஐந்து நிமிடங்களில் அதாவது 18.03.2021 இரவு 07.15 மணிக்கு, அதே நிலம் ஸ்ரீ ராம் ஜென்ம தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைக்கு, சுல்தான் அன்சாரியிடமிருந்து 18.5 கோடி ரூபாய்க்கு கிரயம் செய்யப்பட்ட ஆவணங்களை வெளியிட்ட எதிர்க் கட்சியினர், இந்த முழு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த வழக்கறிஞர், "சில நிமிடங்களில் நடந்துள்ள இந்த மோசடி விவகாரம் வெளிவந்தவுடனே, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் அதிரடியாக களத்தில் இறங்கி, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அலுவலகத்தின் கணக்குகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஏனென்றால், 12,080 சதுர மீட்டர்நிலம் வாங்கிய விவகாரத்தில் மட்டுமே 16.5 கோடி ரூபாய் சுரண்டப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீராமர் கோவில் கட்டுமானத்தில் நடந்துள்ள வில்லங்கங்கள் எவ்வளவோ? என்ற ஐயப்பாடுகள் இயற்கையாகவே எழுந்துள்ளது.

ஆகவே, அறக்கட்டளை நிதி வசூல், செலவுகள் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி பதவிக்கு வந்த பின், வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத் துறைகள் தங்களின் சுயத்தை இழந்து, அரசியல் நடத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருவதால் தான், 16.5 கோடி நிதி மோசடிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு இதில் தலையிடாமல் அமைதி காப்பது நல்லதல்ல." என்று கூறினார். மேலும், நகைச்சுவையாக இந்தியாவின் நிதி நிர்வாகத்தை அதல பாதாளத்துக்குச் கொண்டுசென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குப் பதிலாக, நில விவகாரத்தில் ஆதாயம் பார்த்த சுல்தான் அன்சாரியை நிதியமைச்சராக நியமித்து, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தி இருக்கலாம் என்றார். கிண்டலாகச் சொன்ன அந்த வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.”

இவ்வாறு அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories