இந்தியா

ரயில்வே மைதானங்கள் தனியார்மயம்.. தோனி, பி.டி.உஷாவை கண்டெடுத்த மைதானங்களை கைவிடவேண்டாம் : சு.வெங்கடேசன் MP

15 ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில்வே மைதானங்கள் தனியார்மயம்.. தோனி, பி.டி.உஷாவை கண்டெடுத்த மைதானங்களை கைவிடவேண்டாம் : சு.வெங்கடேசன் MP
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு சு.வெங்கடேசன் எம்.பி அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை 'ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையத்தின்' வசம் வணிக பயன்பாட்டு நோக்கத்திற்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தனியாருக்கு விற்பதுதான். இப்பட்டியலில் சென்னை ஐ.சி.எப் விளையாட்டு வளாகமும் உண்டு.

ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில் விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பது தேசவிரோதம். ரயில்வே வாரியத்தின் 18.05.2021 கடிதம் இந்த அபாயத்தை அமலுக்கு கொண்டு வர முனைந்துள்ளது.

இந்திய ரயில்வே ஒரு விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தை கொண்டுள்ளது. இது சர்வதேச விளையாட்டு வீரர்களில் 50% யையும், பதக்க வீரர்களில் 1/3 பங்கையும் கொண்டிருக்கும் தனிப்பெரும் விளையாட்டு அமைப்பாகும். இந்த வீரர்கள் எல்லாம் கீழ்மட்டப்பணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களே.

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 'தங்கக் கால்களுக்கு' சொந்தக் காரரான பி.டி.உஷா ஆகியோர் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆவார்கள். இவர்கள் எல்லாம் ரயில்வே மைதானங்களில் உள்ள ஆதார வளங்கள், வசதிகளை பயன்படுத்தியே இந்த உயரங்களை எட்டியுள்ளார்கள். இந்தியா இதுவரை வென்றுள்ள 21 ஒலிம்பிக் பதக்கங்களில் 13 ரயில்வே ஊழியர்கள் பெற்றுத் தந்தவை. அதுபோல அர்ச்சுனா விருது பெற்றவர்களில் பலர் ரயில்வே ஊழியர்கள்.

சுசில்குமார் - மல்யுத்தம், பாஸ்கரன்- ஹாக்கி, பி.டி.உஷா - தடகளம், வெள்ளைசாமி- பளு தூக்குதல், ராஜரத்தினம் - கபடி, ஜெகன்நாதன்- மேசைப் பந்து, தமிழ்ச்செல்வன் - உடற்கட்டு

இவர்கள் எல்லோருமே விளையாட்டுக்கான ஆதார வளங்கள் கட்டணம் இன்றி ரயில்வே மைதானங்களில் சாமானிய மக்களுக்கும் கிடைத்ததாலேயே முன்னேறி வந்தவர்கள். இல்லையெனில் இவர்களுக்கு இந்த வளங்கள் எங்கே கிடைத்திருக்கும்? என்பது கேள்விக்குறி.

சமூகத்தில் அடித்தள ஆற்றல்களை அடையாளம் காணவும், பயன்படுத்தவும், வளர்க்கவும் இதுபோன்ற அரசு கட்டமைப்புகள் தேவை. அப்போதுதான் உலக அளவிலும், தேசிய அளவிலும் கொண்டாடத்தக்க பலர் கிடைப்பார்கள்.

இது வெறும் பணம் பண்ணுகிற செயல் அல்ல. தேசத்தின் பெருமையைப் பறை சாற்றுகிற ஆற்றல் மிக்க அடித்தள வீரர்களுக்கு வழி அடைக்கிற அபாய முடிவாகும்.

விளையாட்டுத் துறையின் விரிவான ஈர்ப்பை சிதைக்கிற செயல் ஆகும். ஆகவே இத்தகைய தவறான முடிவை ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும்.”

இவ்வாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories