இந்தியா

மருத்துவரின் கொரோனா சிகிச்சைக்காக ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராமம்... ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்!

ஆந்திராவில் மருத்துவரின் சிகிச்சைக்காகக் கிராம மக்கள் நிதி திரட்டியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மருத்துவரின் கொரோனா சிகிச்சைக்காக ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராமம்... ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் முன் கள வீரர்களாக நின்று பணியாற்றி வருகிறார்கள். மேலும் தடுப்பூசி, கொரோனா குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கர் ராவ், கரஞ்சேடு ஆரம்பச் சுகாதார மையத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமியும் மருத்துவராக உள்ளார். இவர்கள் இருவரம் கரஞ்சேடு கிராம மக்களுக்கு மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நெருக்கடியான காலத்திலும், இந்த கிராம மக்களுக்கு இவர்கள் இருவரும் மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24ம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கொரோனா சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதில் மனைவி பாக்கியலட்சுமி கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார். ஆனால் மருத்துவர் பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அதிக பாதிப்படைந்தைத் தொடர்ந்து விஜயவாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவரின் கொரோனா சிகிச்சைக்காக ரூ.20 லட்சம் நிதி திரட்டிய கிராமம்... ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்!

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாஸ்கர் ராவுக்கு அதிகமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்கு 2 கோடி வரை செலவாகும் எனக் கூறியுள்ளனர். இதனால் மனைவி பாக்கியலட்சுமி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் கணவரைக் காப்பாற்றுவதற்காக தெரிந்தவர்கள் மூலம் பணம் திரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர் பாஸ்கர் ராவின் உடல்நிலை பற்றி அறிந்த கரஞ்சேடு கிராம மக்கள், மருத்துவரின் சிகிச்சைக்காகக் கிராம மக்களிடமிருந்து ரூபாய் 20 லட்சம் திரட்டினர். பின்னர் பாக்கியலட்சுமியிடம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், மருத்துவர் பாஸ்கர் ராவ் எங்கள் கிராமத்திற்கு எவ்வளவோ மருத்துவ சேவை செய்திருக்கிறார். மக்கள் மருத்துவரான அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்து நிதி திரட்டினோம். அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் கொடுத்த பணம் சிகிச்சைக்கு போதாது என்றாலும், இவர்களின் அன்பை ஏற்றுக்கொள்கிறேன் என பாக்கியலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி அறிந்த முதல்வர் ஜெகன்மோகன், மருத்துவர் பாஸ்கர் ராவின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். இதையடுத்து பாஸ்கர் ராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories