இந்தியா

பட்டும் திருந்தாத பா.ஜ.க : “வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் கொரோனா அண்டாது” - வதந்தி பரப்பும் MLA!

கொரோனா உயிரிழப்பைத் தவிர்க்க முடியாமல் போராடி வரும் நிலையில் பா.ஜ.க-வின் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இவ்வாறு வதந்தி பரப்பி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டும் திருந்தாத பா.ஜ.க : “வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் கொரோனா அண்டாது” -  வதந்தி பரப்பும் MLA!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.

ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கை வசதியின்றி தத்தளித்து வருகின்றனர்.

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி வரும் இந்தச் சூழலிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் பிற்போக்கு கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

குறிப்பாக மாட்டுச்சாணம், கோமியம் போன்றவற்றைப் பயன்படுத்தினால் கொரோனா வராது என மக்களிடையே வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

பா.ஜ.க அமைச்சர்களும், எம்.எல்.ஏ, எம்.பி என பொறுப்புமிக்க பதவி வகிப்பவர்களும், கோமியம் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என பொய்யான தகவலை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

பட்டும் திருந்தாத பா.ஜ.க : “வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் கொரோனா அண்டாது” -  வதந்தி பரப்பும் MLA!

கோமியம் குடித்தால் கொரோனா தொற்றை தடுக்கலாம் எனப் பேசிய பலருமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், நாடு முழுவதும் ஆங்காங்கே கோமியத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்த பா.ஜ.க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போதும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர், பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்.எல்.ஏவான சுரேந்திர சிங், கோமியம் குடித்தால் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கலாம் எனப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ, “பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடுத்த அரை மணிநேரத்துக்கு ஏதும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு குடித்தால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். எந்த விதமான நோய்க்கும் பசுவின் கோமியம் மருந்தாகும்.” எனக் கூறியுள்ளார்.

அரசுகளும், தன்னார்வலர்களும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமலும், உயிரிழப்பைத் தவிர்க்க முடியாமலும் போராடி வரும் நிலையில் பா.ஜ.க-வின் மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து இவ்வாறு வதந்தி பரப்பி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories