இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், அவை அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளது.
குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாக, இந்தியாவில் நோய்த்தொற்றைச் சமாளிக்க முடியாமல் மோடி அரசு திணறி வருகின்றது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டாலும், பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆக்சிஜன் பற்றக்குறைக் காரணமாக இந்தியாவில் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. இப்படி கடும் நெருக்கடியில் இந்தியா சிக்கித் தவித்து வருகிறது.
இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமருக்கு ரூபாய் 13,450 கோடியில் புதிய இல்லம் கட்டப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பலரும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடிக்குக் கட்டப்பட உள்ள இல்லத்திற்கு ஆகும் செலவில் 45 கோடி தடுப்பூசிகள் வாங்கலாம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "மத்திய விஸ்டா திட்டத்துக்காகச் செலவிடும் ரூபாய் 13,450 கோடியில் 45 கோடி மக்களுக்குத் தடுப்பூசி வாங்கமுடியும், ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கலாம், 2 கோடி குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கலாம். ஆனால் மக்களின் உயிரைவிடப் பிரதமரின் ஈகோதான் பெரிது" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் பிரியங்கா காந்தி,"மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், தடுப்பூசி, படுக்கைகள், மருந்துகள் பற்றாக்குறையாலும் தடுமாறுகிறார்கள். இந்த நேரத்தில் நாட்டில் உள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி மக்களைக் காப்பதுதான் மத்திய அரசின் வேலையாக இருக்க வேண்டும். அதை விடுத்து, பிரதமர் மோடிக்கு ரூ.13 ஆயிரம் கோடியில் புதிய வீடு கட்டுவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது. இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது என்பது மக்களுக்குத் தெரியவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.