இந்தியா

“பொருளாதார சரிவை மூடிமறைக்கவே ஆத்மநிர்பார் அறிவிப்புகள்” - காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆத்மநிர்பார் அறிவிப்புகள் ரிசர்வ் வங்கியின் கணிப்பை மூடிமறைப்பதற்கே என காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது.

“பொருளாதார சரிவை மூடிமறைக்கவே ஆத்மநிர்பார் அறிவிப்புகள்” - காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. ஜூலை-செப்டம்பர் மாத 2-வது காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.6 சதவீதம் சரியும் என ரிசர்வ் வங்கியின் மாதாந்திர ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டு முழுவதும் மைனஸ் 9.5 சதவீதம் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பார் 3.0 திட்டங்கள் குறித்து அறிவித்தார். ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையை மூடி மறைக்கவே நிதியமைச்சர் ஆத்மநிர்பார் 3.0 திட்டத்தை வெளியிட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் மெய்நிகர் முறையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், “பொருளாதாரம் தொடர்ந்து மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதை மீட்க மத்திய அரசிடம் திட்டம் எதுவும் இல்லை. அதேநேரம் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதிலும், பொருளாதாரம் தொடர்பாக தலைப்புச்செய்திகளில் இடம்பிடிப்பதிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், “விவசாயிகளுக்கு நியாயமான விலையை அளித்தல், வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை மக்கள் கையில் பணம் வழங்குதல், அமைப்பு சார் தொழில்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்குதல், மாநில அரசுகளுக்கு அதிகமான நிதி வழங்குதல் மூலமே பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த முடியும்.

மாநிலங்களுக்குப் பணம் வழங்குவதைக் குறைத்தால், மாநில அரசுகள் 2020-2021ம் ஆண்டில் தங்களின் முதலீட்டுச் செலவைக் குறைத்துவிடுவார்கள். இதனால் நடப்பு நிதியாண்டில் பொருளதாாரத்தை மீட்சிக்குக் கொண்டு வருவது விருப்பத்துடன் கூடிய பிரார்த்தனையாக மட்டுமே இருக்கும்.” எனக் கவலை தெரிவித்துள்ளார்.

“பொருளாதார சரிவை மூடிமறைக்கவே ஆத்மநிர்பார் அறிவிப்புகள்” - காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு!

ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், “பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் திட்டம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இதனால் 2020-2021-ம் ஆண்டு ஒரு வீணாக்கப்பட்ட ஆண்டாகவே இருக்கும். முந்தைய ஆண்டைவிட பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகவே இருக்கும். மத்திய பா.ஜ.க அரசு வெளியிடும் சலுகைகள் அனைத்தும் வெறும் அறிவிப்புகள் மட்டுமே.

நிதியமைச்சரின் அறிவிப்புகள் நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் துணைபுரியாது. இந்த மிகப்பெரிய அறிவிப்புகளின் தாக்கம், வர்த்தகம், தொழில், வியாபாரம், குறிப்பாக நடுத்தர, சிறு, குறுந்தொழில்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories