இந்தியா

“தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டது ஏன்?” : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

இந்தியாவே மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள சூழலில், ஒரு மொழியை தவிர்த்து அறிவிப்பாணை வெளியிடுவதன் நோக்கமென்ன என மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டது ஏன்?” : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து தமிழ் மொழியை இணைத்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரி, தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானுடவியல் ஆகிய துறைகளில் முதுகலைப்பட்டம் மற்றும் சமஸ்கிருதம், பாலி, மற்றும் அரபு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வித் தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டது ஏன்?” : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கல்வித்தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அந்த விசாரணையின்போது, மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக நேற்று செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மத்திய அரசுக்கு சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

ஏன் அறிவிப்பாணை வெளியிடும்போதே செம்மொழிகளில் முதன்மை மொழியான தமிழ் மொழியை இணைக்கவில்லை; இந்த அறிவிப்பாணையை தயார் செய்த அதிகாரி யார்? ஒரு அதிகாரி தொல்லியல் துறையின் அறிவிப்பாணை தயாரிக்கிறார் என்றால்,குறைந்தபட்சம் செம்மொழிகள் எவை என்று தெரியாத அளவிற்குச் செயல்படுவாரா? அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.

“தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை அறிவிப்பை வெளியிட்டது ஏன்?” : மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

மேலும், மத்திய அரசு சார்பாக தற்போது தமிழ் மொழியை இணைத்து வெளியிட்டுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு தொடர்ந்த பின்புதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அது மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்தான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மொழிகளைப் பற்றிய பிரச்னைகளைக் கையாளும்போது, மொழிகளுடன் உணர்வுடன் கவனமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் சாதி. மத அடிப்படையில் பிரிக்கப்படவில்லை; மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப் பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மொழிகளிலே பழமையான மொழியான தமிழ் மொழியை மறந்து, தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பை வெளியிட்டது ஏன்? ஒருவேளை, இதற்கான எதிர்ப்பு குரல் எழுப்பவில்லை என்றால் தமிழ்மொழி இணைக்கப்பட்டு இருக்குமா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories