பிரதமர் நரேந்திர மோடி முறைசாரா தொழில்துறையை அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளதை அடுத்து ராகுல் காந்தி மத்திய அரசு செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுவருகிறார்.
அந்தவகையில், இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழ்ந்த முறைசாரா தொழில்துறையை திடீர் ஊரடங்கால் அழித்துவிட்டதாகவும் ராகுல் காந்தி பா.ஜ.க அரசு மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசியுள்ள அவர் “சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் உள்ள ஏழைகள் அனைவரும் தினக்கூலிகளே. அவர்கள் தினசரி ஈட்டும் பணத்தில் வாழ்பவர்கள். நீங்கள் ஊரடங்கை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் அமல்படுத்தி அவர்களை தாக்கினீர்கள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்கள் தொடரும் எனக் கூறியதாகவும், அந்த 21 நாட்களில் முறைசாரா தொழில்துறையின் முதுகெலும்பு உடைந்தது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் பண மதிப்பிழப்பு நீக்கம், ஜி.எஸ்.டி மற்றும் கொரோனா ஊரடங்கு என குறிப்பிட்டுவரும் ராகுல் காந்தி இந்த வீடியோவில் 97 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அரசு அனுப்பியதாக தெரிவித்து வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை மற்றும் மூடப்பட்ட குறு மற்றும் சிறு தொழில்களின் எண்ணிக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊரடங்கு என்பது கொரோனாவின் மீதான தாக்குதல் இல்லை. ஊரடங்கு என்பது இந்திய ஏழைகளின் மீதான தாக்குதல். ஊரடங்கு என்பது தொழிலாளர்களின், விவசாயிகளின், சிறிய கடைகாரர்களின் மீதான தாக்குதல். அது முறைசாரா தொழில்துறையின் மீதான தாக்குதல்.” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.