இந்தியா

“ஆங்கிலத்தில் எழுப்பிய RTI கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்தது ஏன்?” - கொந்தளித்த பெ.மணியரசன்!

காவிரி தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் RTI சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு மத்திய நீர் ஆற்றல் துறை இந்தியில் பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“ஆங்கிலத்தில் எழுப்பிய RTI கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்தது ஏன்?” - கொந்தளித்த பெ.மணியரசன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காவிரி தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு மத்திய நீர் ஆற்றல் துறை இந்தியில் பதில் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மத்திய நீர் ஆற்றல் துறைக்கு, தகவல் உரிமைச் சட்டத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி 8 கேள்விகள் கேட்டிருந்தார். காவிரி மேலாண்மை ஆணையம் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமைக்கப்பட்டுள்ளதா, ஜூன் ஜூலை மாதங்கள் உரிய காவிரி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது உள்ளிட்ட கேள்விகளை அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்து நீர் ஆற்றல் துறையிலிருந்து இரண்டு கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் வந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தி மொழி கல்வி மொழியோ அல்லது மாநில அலுவல் மொழியோ இல்லாத பட்சத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் விடை அளிப்பது சட்டவிரோத செயல் என பெ.மணியரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அவருக்கு வந்த கடிதத்தில் முகவரி ஆங்கிலத்திலும், அவரது பெயர் இந்தியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நீர் ஆற்றல் துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய பதில் கிடைக்கவில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

“ஆங்கிலத்தில் எழுப்பிய RTI கேள்விகளுக்கு இந்தியில் பதிலளித்தது ஏன்?” - கொந்தளித்த பெ.மணியரசன்!

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில், “நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் மத்திய அரசும் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது கவலையளிக்கிறது.

காவிரி நதி நீர் குறித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தகவல் அறியும் உரிமை சட்டப்படி ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

பெ.மணியரசன் கடிதத்தில் எழுப்பியுள்ள எட்டு வினாக்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இரண்டு கடிதங்களில் பதில் அனுப்பியுள்ளது. இப் பதில் கடிதங்கள் 100 சதவிகிதம் இந்தியில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது.

இது எதேச்சையாகவோ, இயல்பாகவோ நடந்தது அல்ல. மொழித் திணிப்பு வெறியுடன் எழுதப்பட்டுள்ள கடிதங்கள் ஆகும்.

தமிழ்நாட்டில் மற்றும் ஆங்கிலம் மட்டுமே அரசின் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதையும், இந்தி மொழி எந்த வகையிலும் பயன்படுத்தவதுதில்லை என்பதையும் மத்திய அரசும், நீர்வளத்துறையும் அறிந்திருக்க வேண்டும்.

ஏற்கனவே யோகா மருத்துவம் தொடர்பான பயிற்சி முகாமில் ‘இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்’ என ஓர் உயர் அதிகாரி உத்தரவிட்டதின் தொடர்ச்சியாகவே இது கருதப்பட வேண்டும்.

நீர் வளத்துறை இந்தியில் பதில் கடிதம் அனுப்பியுள்ளதன் மூலம் தனது மொழி எதேச்சதிகாரத்தை நிலை நாட்ட மத்திய அரசு முயல்வதை உறுதிப்படுத்துகின்றது.

மத்திய அரசின் இந்தச் செயல் நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது. கூட்டாட்சி கோட்பாடுகளை சீர்குலைப்பது, மொழி திணிப்பில் பலவந்தமாக ஈடுபடுவது. மத்திய அரசின் இந்த மொழி வெறி செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பது, இந்தி மொழி திணிப்பது, சமஸ்கிருதமயமாக்குவது என ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீதும் மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க அனைவரும் முன் வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories