உத்தரபிரதேச போலிசாரிடமிருந்து பாதுகாப்பு கோரி கான்பூர் வழக்கில் கைதான சப் இன்ஸ்பெக்டர் கே.கே.சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு.
உ.பி.மாநிலம் கான்பூரில் கடந்த 3 ஆம் தேதி சோதனை நடத்தச் சென்ற போலீசார் எட்டு பேரை விகாஸ் துபே தலைமையிலான ரவுடி கும்பல் சுட்டுக் கொன்றது. ரவுடி கும்பலுக்கு சோதனை குறித்த தகவலை கசியவிட்டதாக சப் இன்ஸ்பெக்டர் கே.கே.சர்மா உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சர்மா உ.பி.போலீசாரால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்று அச்சம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணைக்கு அழைத்துச் சென்றால் தன் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் சிறைக்கு வெளியே தன்னை அழைத்துச் செல்லக் கூடாது என்றும், சிறையில் வைத்து மட்டுமே விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கே.கே. சர்மாவும், அவரது மனைவியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சப் இன்ஸ்பெக்டர் ஒருவரே போலீசாரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ரவுடி துபே மத்திய பிரதேச போலிஸிடம் இருந்தும் தப்பிக்க முயன்றதாக உத்தரபிரதேச போலிஸார் கூறியதை மத்திய போலிஸார் மறுத்துள்ளனர். இதனால் உ.பி., போலிஸின் பொய் அம்பலமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில் உ.பி.யில் நடந்துள்ள 119 என்கவுண்டர் கொலைகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட நான்கு மனுக்கள் இதுவரை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று அனைத்து வழக்குகளும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்புள்ளது.