PM Cares நிதி குறித்து மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் தணிக்கை செய்ய வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா நிவாரணத்திற்கென மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட PM Cares நிதி குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதுகுறித்து விளக்கம் கேட்டு தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி ட்விட்டரில், “பிஎம் கேர்ஸ் நிதியில் முரண்பாடுகள் இருக்கின்றன. வெளிப்படைத்தன்மை இல்லை. ரகசியம் எப்போதும் கெட்ட விஷயங்களுக்கான வழி.” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி இன்று காணொளிக் காட்சி மூலம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் நிவாரண நிதி என இருக்கும்போது ஏன் பிஎம் கேர்ஸ் நிதி தனியாக உருவாக்கப்பட்டது? கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியை கொரோனா நோயாளிகளுக்கு இதுவரை ஏன் செலவிடவில்லை?
பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்து மத்திய தலைமை தணிக்கை அலுவலகம் அல்லது சுயாட்சி பெற்ற நம்பகத்தன்மை உள்ள நிறுவனம் தணிக்கை செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.