இந்தியா

“உங்களுக்கு தி.மு.க என்றும் பக்கபலமாக இருக்கும்” : மண்ணடி போராட்டக் களத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!

என்.பி.ஆர். கணக்கெடுப்புக்கு ஒத்துழையாமல், 'ஒத்துழையாமை இயக்கத்தை' நடத்த வேண்டும் என்றும் அதற்கு தி.மு.க பக்கபலமாக இருக்கும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உங்களுக்கு தி.மு.க என்றும் பக்கபலமாக இருக்கும்” : மண்ணடி போராட்டக் களத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னை மண்ணடியில், இஸ்லாமியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கணிசமாக பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அப்போது போராட்டக்கார்களுக்கு ஆதரவளித்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “உங்களை நான் முன்கூட்டியே வந்து பார்த்திருக்க வேண்டும். ஆனால், மிகவும் லேட்டாக வந்திருக்கிறேன். லேட்டாக வந்திருந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறேன். நான் ஏன் வந்திருக்கிறேன் என்றால், எங்களை போன்றவர்கள் உங்களைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாக ஒரு தவறானப் பிரச்சாரத்தை பலர் செய்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிடக்கூடாது என்று தான் கூடுமான வரையில் தவிர்த்துக் கொண்டு வந்தேன். நான் தவிர்த்திருந்தாலும், தி.மு.கவைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் உங்களை வந்து சந்தித்து, உங்களுக்கு ஆறுதல் தருகின்ற நிலையில் இருந்தார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

“உங்களுக்கு தி.மு.க என்றும் பக்கபலமாக இருக்கும்” : மண்ணடி போராட்டக் களத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!

இன்று நான் சட்டமன்றத்தில் இந்தப் போராட்டத்தின் தன்மையைப் பற்றி எடுத்துப் பேசிய நேரத்தில், அங்கு நடந்திருக்கக்கூடிய விவாதங்கள், அதற்கு பிறகு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர்கள் இன்று மாலை சந்தித்து நன்றி தெரிவித்து, “நாங்கள் நடத்தும் போராட்டத்தில் பங்குபெற்று எங்களை பெருமைப்படுத்த வேண்டும்” என்று சொன்னார். நான் பெருமைப்படுத்துவதற்காக வரவில்லை. உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை எடுத்து வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி இந்தப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. ஏறக்குறைய 27 நாட்களாக இந்த மண்ணடி பகுதியில் இருக்கும் நீங்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன், ஒருமித்த கருத்துடன், உறுதியுடன் மிகப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்றைக்கு மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி சி.ஏ.ஏ என்ற இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலமாக என்.பி.ஆர்., என்.ஆர்.சி. என்கிற சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத் திருத்தம் இஸ்லாமியப் பெருமக்களுக்கு மட்டும் ஏற்பட்ட இன்னல்கள் அல்ல. ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட துன்பம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பொதுவாக முஸ்லீம்களுக்காக, இந்துக்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களுக்களின் உரிமைக்காக நாம் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

“உங்களுக்கு தி.மு.க என்றும் பக்கபலமாக இருக்கும்” : மண்ணடி போராட்டக் களத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!

நாடாளுமன்றத்தில் தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நமது கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தார்கள். இருந்தாலும், பா.ஜ.க. உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த காரணத்தினால் மக்களவையில் வெற்றி பெற்றது.

ராஜ்ய சபாவில் வெற்றி பெற்றால் தான் சட்டம் நிறைவேறும். ராஜ்ய சபாவைப் பொறுத்தவரையில், பா.ஜ.க.வுக்கு பெரும்பாண்மை கிடையாது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்தால் பெரும்பாண்மை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. தி.மு.க-வைச் சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் அந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் அ.தி.மு.கவைச் சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள் 11 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த அன்புமணி ராமதாஸ் உட்பட 12 உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது, இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறியிருக்காது. ஆனால், ஆதரித்து வாக்களித்ததனால் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது. அது தான் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமை. இந்தக் கொடுமை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கும் மிகப்பெரிய கொடுமையை, அநியாயத்தை செய்திருக்கிறார்கள். இந்தத் துரோகத்தை செய்த அவர்களை நாம் சும்மா விடலாமா? அதனால் தான் இந்தப் பிரச்சனை இன்று உருவாகியிருக்கிறது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதலில் குரல் கொடுத்தது. எந்த மாநிலத்திலும் செய்ய முடியாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். நம்முடைய தோழமைக் கட்சிகள், கூட்டணிக் கட்சிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து, உடனடியாக இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் போட்டோம். முதன்முதலில் இந்தியாவிலேயே ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தியது நாம் தான்.

“உங்களுக்கு தி.மு.க என்றும் பக்கபலமாக இருக்கும்” : மண்ணடி போராட்டக் களத்தில் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!

தி.மு.க-வைச் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய பேரணியை நடத்தினோம். கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 8 நாட்கள் நடந்தது. ஒருகோடி கையெழுத்தை வாங்க வேண்டும் என்றுதான் திட்டமிட்டோம். மக்கள் தாங்களாகவே முன்வந்து கையெழுத்து போடுகிறோம் என்று எல்லாத் தரப்பு மக்களும் நம்முடைய நாட்டிற்கு ஆபத்து என்று அவர்களே மனமுவந்து இரண்டு கோடி பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.

அதையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை என்று கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய பேரணியை நடத்தி, இரண்டு கோடி கையெழுத்து பெற்று ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருக்கிறோம். இருந்தாலும் நாம் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய போது, இது குறித்து விவாதித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்றும், உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் என்று கடந்த கூட்டத் தொடரில் எழுதிக் கொடுத்தேன்.

கூட்டம் தொடங்கிய பிறகு ஒவ்வொரு நாளும் நான் எழுந்து கேட்டதற்கு, ஆய்வில் இருக்கிறது, ஆய்வில் இருக்கிறது என்று சபாநாயகர் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். நான்கு நாட்கள் சட்டமன்றம் நடந்தது. அதன்பிறகு மீண்டும் சட்டமன்றம் கூடியிருக்கிறது. இன்று சட்டமன்றம் தொடங்கியவுடன், நேரமில்லா நேரத்தை பயன்படுத்தி எழுந்து கேட்டேன். அனுமதித்தார். உடனடியாக நீங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும்.

இன்றைக்கு மண்ணடியில், வண்ணாரப்பேட்டை போன்ற பகுதிகளிலும் தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் காலையிலிருந்து இரவு வரை போராட்டங்கள் நடந்தாலும் வண்ணாரப்பேட்டையிலும் 24 மணி நேரமாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் இந்த போராட்டத்தில் பங்கு கொண்டு இருக்கிறார்கள். எனவே அதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். அவர்களது கோரிக்கைகள் சட்டமன்றத்தில் தீர்மானம் போட வேண்டும் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று அழுத்தம் திருத்தமாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அத்தனை பேரும் சொல்லி வருகிறார்கள்.

அது மட்டுமல்ல. இன்றைக்கு பா.ஜ.கவில் கூட்டணி கட்சிகளைப் பற்றி உங்களுக்கு தெரியும். அந்தக் கட்சிகளை சார்ந்த முதலமைச்சர்கள் பல மாநிலத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தவர்கள் தான். ஏறக்குறைய 13 மாநிலங்களில் இந்த தீர்மானத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.

இந்தச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அ.தி.மு.க அந்தப் பாவத்திற்காகவாவது என்ன செய்திருக்க வேண்டும்? அதற்காகவாவது இந்தச் சட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் இல்லையா? அதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை.

இன்றைக்குக்கூட சட்டமன்றத்தில் கேட்டேன். மீண்டும் மீண்டும் என்ன சொல்கிறார்கள் என்றால், 'இந்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை, சிறுபான்மையினருக்குப் பாதிப்பு இல்லை' என்றே சொல்கிறார்கள். இந்தச் சட்டத்தால் யார் எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள், எந்த நிலையில் பாதிக்கப்படுகிறார்கள் என்று சட்டமன்றத்தில் விரிவாகப் பேசினேன். ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் 'சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர முடியாது' என்று திட்டவட்டமகாத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைக் கண்டித்து நாங்களும் எங்கள் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் வெளிநடப்பு செய்துவிட்டு, வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு மீண்டும் சட்டமன்றத்துக்குச் சென்றோம். இந்த ஆட்சியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பே இல்லை என்று உறுதியாகத் தெரிகிறது. காரணம், இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தால் என்ன நடக்கும்? இரண்டு நாள்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கையை வெளியிட்டார்கள். 'சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பக இருப்போம்' என்று பொய்யான அறிக்கையை வெளியிட்டார்கள்.

அத்துடன் இந்தச் சட்டத்தில் உள்ள பிரச்னைகளை டெல்லியில் தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் தங்கமணியையும் அனுப்பிவைத்தார்கள். சில விளக்கங்கள் வேண்டும் என்று சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்தனுப்பினார்கள். சரி, அனுப்பிவைத்திருக்கிறார்களே, நல்ல காரியம்தானே என்று நினைத்தோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள், அதற்கு அனுமதி கேட்கிறார்கள் என்று நாம்கூட நினைத்துக்கொண்டிருந்தோம்.

கடிதத்துடன் விமான நிலையம் சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத்தான் நேரடியாகச் சந்தித்திருக்கிறார்கள். சந்தித்தபோது அந்தக் கடிதத்தை வாங்கி அமித்ஷா பிரித்துக்கூட பார்க்கவில்லையாம். முதலமைச்சர் கொடுத்த கடிதத்தை அமித்ஷா அவர்கள் வாங்கி பிரித்துக் கூட படிக்கவில்லையாம். அதற்கு அங்கு சென்றவர்கள் தீர்மானம் இயற்றப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் தீர்மானம் மட்டும் போட்டீர்கள் என்றால் நீங்கள் அத்தனை பேரும் ஜெயிலில் இருப்பீர்கள். ஊழல் வழக்குகள், சிபிஐ வழக்குகள் என மிரட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

மக்கள் எப்படி போனாலும் பரவா இல்லை நாம் ஜெயிலுக்கு போகக்கூடாது என்கிற எண்ணத்திலேதான் இந்த ஆட்சி அஞ்சி நடுங்கி சென்று கொண்டிருக்கிறது. ஆக இதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. நான் உங்களை எல்லாம் பணிவோடு உரிமையோடு வேண்டி கேட்டுக் கொள்ள விரும்புவது ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடத்த போவதாக ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது குறித்து கூட இன்று கேட்டேன்.

அதற்கும் ஒரு தவறான விளக்கத்தைதான் அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னார்கள். ஏப்ரல் 1 முதல் கணக்கெடுப்பு எடுக்க வரும்போது யாருமே அதற்கு ஒத்துழைக்க மாட்டோம் துணை நிற்க மாட்டோம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் திமுக அதை முன்னின்று உங்களுக்கு துணைநிற்க காத்திருக்கிறது என்கிற அந்த அன்பான வேண்டுகோளை எடுத்து வைக்கிறேன். நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம். தொடர்ந்து போராட்டம் நடத்தும் சூழல் வரும். அந்த போராட்டத்திற்கு தி.மு.க உங்களுக்கு என்றும் பக்கபலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories