இந்தியா

"RSSக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்குகிறது பா.ஜ.க" - ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!

மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைக்க மக்கள் விரும்பியிருந்தால் ஏன் மாநிலங்களில் தோல்வியை அளிக்கவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

"RSSக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்குகிறது பா.ஜ.க" - ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த பா.ஜ.க தலைமையிலான அரசு முனைவதன் மூலம், ஓர் ஆட்சியே நாட்டில் சட்ட ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பா.ஜ.க ஆட்சி - ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை பெரிதும் நிறைவேற்றி விட்டது!

நாடாளுமன்றத் தேர்தலில் சில ‘‘வித்தைகள்’’, தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு காரணமாகவே பா.ஜ.க மீண்டும் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை அத்தேர்தலில் பெற்று, மக்களவையில் பெரும்பான்மையைப் பெற்று, அதீதமான சட்டங்களை - போதிய விவாதத்திற்குக்கூட அவகாசம் அளிக்காமல், உடனடியாக - ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை நிறைவேற்றத் துடித்து, பெரிதும் நிறைவேற்றியும் விட்டது.

63 சதவிகித மக்கள் மோடி ஆட்சியை மீண்டும் கொண்டுவர ஆதரவு தரவில்லை. என்றாலும், அப்படி ஒரு பெருத்த மெஜாரிட்டி ஆட்சியான பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொதுத் தேர்தலில் பெற்ற வாக்குகள் வெறும் 37.6 சதவிகிதமே!

இதன் மறு அர்த்தம் - 63 சதவிகித மக்கள் மோடி ஆட்சியை மீண்டும் கொண்டுவர ஆதரவு தரவில்லை என்பதுதானே! தற்போதுள்ள தேர்தல் முறையினால் வாக்குகள் குறைவாக வாங்கினாலும், இடங்களின் எண்ணிக்கை பெருகும் நிலை உள்ளது என்பதால்தான் இந்த புரூட் மெஜாரிட்டி. அதன் ரகசியம் அவ்வளவுதான்.

உள்ளபடியே மக்கள் இவ்வாட்சியை விரும்பி இருப்பார்களேயானால், அதற்கடுத்து நடந்த பல மாநிலத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி - அமித்ஷாவின் தீவிர முயற்சிகள் ஏன் வாக்காளரிடையே வெல்லவில்லை?

"RSSக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்குகிறது பா.ஜ.க" - ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!

‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை!’’

ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலத்தில் எட்டு தடவைகளில் விட்டுவிட்டு தேர்தல் - பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வதற்கு வசதியாகவே பலமுறை விட்டுவிட்டு தேர்தல்...! என்றாலும், ‘‘எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை!’’ மோடி - அமித்ஷா பிரச்சாரப் புயல், கடும் புயல் - மக்களிடம் எடுபட்டதா? இல்லையே!

அரியானாவில் பா.ஜ.க தனித்து ஆட்சி அமைக்கும் வகையில், வெற்றி பெறத்தவறியதால், எதிர்த்தவர்களிடமே ‘அரசியல் பேரம்‘ பேசி, ஆட்சி அமைத்துள்ளார்கள்.

மும்பையைத் தலைநகராகக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், பா.ஜ.க பெரும்பான்மை பெறாத நிலையில், சிவசேனாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், தாங்களே அவசரமாகப் பதவியேற்று - ஒருசில நாள்களில் பதவி விலகிட வேண்டிய கேவல நிலை ஏற்பட்டது!

அதற்குமுன் அரசமைப்புச் சட்ட அமைப்புகளான குடியரசுத் தலைவர் அலுவலக அதிகாரம், ஆளுநர் அலுவலக அதிகாரம் எல்லாமுமே தவறாகப் பயன்படுத்தி - குடியரசுத் தலைவரை ‘‘ஆட்டுவித்தால் ஆடாதார் எவரே?’’ என்ற நிலைக்குத் தள்ளியது அண்மைக்கால அரசியல் அவலங்களில் தலையாயது ஆகும்!

"RSSக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்குகிறது பா.ஜ.க" - ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!

16 ஆண்டுகால ஜார்க்கண்ட் பா.ஜ.க ஆட்சிக்கு அம்மாநில மக்கள் விடை கொடுத்துவிட்டனர்!

பிறகு சிவசேனா - சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் - இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்று இன்று பா.ஜ.க வடையைப் பறிகொடுத்த காகத்தைப்போல, ஏமாந்து நிற்கிறது. மக்கள் பா.ஜ.க தனியே ஆள தீர்ப்பு அளிக்கவில்லையே!

ஹரியானா, மகாராஷ்டிராவை அடுத்து இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் ஜே.எம்.எம் தலைமையில் சிபுசோரனின் மகன் (கட்டடக் கலை படிப்பாளர்) ஹேமந்த் சோரன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

16 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆண்ட பா.ஜ.க.வுக்கு 40 சதவிகித மலைவாழ் மக்களைக் கொண்ட அம்மாநிலம் விடை கொடுத்து ஆட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளது!

மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில் ஏனோ அவசரம் காட்டவில்லை! இடைத்தேர்தல்களில் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பா.ஜ.க தோல்விதான் அடைந்தது. அப்போதே நாம் இனி இறங்குமுகம்தான் பா.ஜ.கவுக்கு என்று எழுதினோம்! இன்று நடப்பதும் அதுதானே!

ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை அவசரக் கோலத்தில் நிறைவேற்றிடக் காட்டும் அவசரத்தை மோடி அரசு அதலபாதாளத்திற்குச் சரிந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தை - மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில் ஏனோ முயற்சிக்கவில்லை.

"RSSக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்குகிறது பா.ஜ.க" - ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!

நாடு தழுவிய அளவில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை!

வெங்காயம் உள்பட விலைவாசி ஏற்றம் - மோடி ஆட்சியின் ‘புரட்சி’ இது! (முன்பு வாஜ்பாய் ஆட்சியில் வெங்காயம் உயரே பறந்தது).

வேலையில்லாத் திண்டாட்டம், ஜி.டி.பி 4.50 சதவிகிதத்திற்கும் குறைவு, பல வெளிநாட்டவர்களின் புறக்கணிப்பு, ஐ.எம்.எஃப். என்ற சர்வதேச நிதியம் எச்சரிக்கை இவை இந்தியாவிற்கு - நம் நாட்டிற்குப் பெருமையளிப்பனவா?

இந்துராஷ்டிரம் என்ற கொள்ளிக் கட்டையை எடுத்து பா.ஜ.க ஆட்சி தன் தலையைச் சொறிந்து கொண்டதால் அந்தத்தீ நாடு தழுவிய அளவில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கியுள்ளது. நாட்டில் அமைதி சீர்குலைந்து வருவதோடு, மக்களை மத அடிப்படையில் பிரிவினை செய்து பேதத்தை விதைப்பது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

தங்கள் உண்மை முகத்தை மக்களுக்குக் காட்டுகிறார்கள்! ஜார்க்கண்ட் முடிவு மாபெரும் சுவரெழுத்து எச்சரிக்கையாகும்!தங்களது பிடிவாத நிலைப்பாட்டை இப்படி கரைத்துவிடலாமா?ஒருமைப்பாடு பேசிடும் 24 கேரட் காவி தேச பக்தர்களின் முகமூடி கழலுகிறது! அவர்களே கழற்றி தங்கள் உண்மை முகத்தை மக்களுக்குக் காட்டுகிறார்கள்! வாக்காளர்களும் புரிந்துகொள்ளத் தொடங்கி விட்டனர்!

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தை கெல்லி எறியும் இம்முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் திரண்டு கொண்டிருக்கிறார்கள். புரிந்துகொள்ளவேண்டியவர்கள் சரியாக புரிந்துகொள்ள தவறக்கூடாது! தங்களைத் திருத்திக் கொள்ளட்டும்!” இவ்வாறு ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories