குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே, அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அசாம், திரிபுராவில் மக்கள் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.
இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில், பா.ஜ.க அரசு காஷ்மீரில் செய்தது போல இரண்டு மாநிலங்களிலும் ராணுவனத்தினரை குவித்து மக்களை அச்சப்படுத்தி வருகிறது.
மேலும் போராட்டத்தின் செய்திகள் வெளியில் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கியுள்ளது. பா.ஜ.க அரசின் இத்தகைய அனுகுமுறை மக்களிடையே பெரும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“அசாமில் உள்ள எனது சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை மசோதா குறித்து நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என நான் உறுதியளிக்க விரும்புகிறேன். உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும் பறிக்க முடியாது.
மேலும், அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும்” என தெரிவித்திருந்தார். மோடியின் இந்த ட்விட்டர் பதிவுக்கு காங்கிரஸ் பதிலடி ஒன்றை தெரிவித்துள்ளது.
மோடியின் பதிவைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கூறியிருப்பதாவது, “அசாமில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் உங்களின் உறுதியை படிக்க முடியாது மோடிஜி. ஏனென்றால், அவர்களின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள்” என தெரிவித்துள்ளனர்.