இந்தியா

“காஷ்மீரில் பாசாங்கு செய்யும் மோடி அரசின் நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன்” : ஐரோப்பிய எம்.பி. ஆவேசம்!

மோடி அரசாங்கத்தில் காஷ்மீரில் எல்லாம் நன்றாக உள்ளது என பாசாங்கு செய்யும் அரசின் பிரசார நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன் என ஐரோப்பிய எம்.பி. கிறிஸ் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

“காஷ்மீரில் பாசாங்கு செய்யும் மோடி அரசின் நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன்” : ஐரோப்பிய எம்.பி. ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதுமட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே இராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.

மேலும், மாநிலம் முழுவதையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாக, வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என பொய் பேசி வந்தனர் பா.ஜ.க தலைவர்கள். அதுமட்டுமின்றி காஷ்மீர் மக்களிடம் எதிர்கட்சி தலைவர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

பல தலைவர்கள் இன்னும் வீட்டுச் சிறையில் இருப்பதாகவும், சிறுவர்களைக் கூட சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காஷ்மீரின் கள நிலவரம் பற்றி அறிவதற்காக, ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 27 எம்.பி.க்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

அவர்கள் காஷ்மீர் பகுதியில் உள்ள மக்களிடம் உரையாட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் உள்ள முக்கிய எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினருக்கு மறுக்கப்பட்ட உரிமை ஐரோப்பிய எம்.பி களுக்கு வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“காஷ்மீரில் பாசாங்கு செய்யும் மோடி அரசின் நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன்” : ஐரோப்பிய எம்.பி. ஆவேசம்!
ஐரோப்பிய எம்.பி-களின் வாகன பேரணி

இதுதொடர்பாக எதிர்கட்சி, இடதுசாரிகள் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துவித்து வருகின்றனர். ஆனால் இதனை மோடி அரசாங்கம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

குண்டு துளைக்காத காரில் பாதுகாப்பு படையினரால் ஐரோப்பிய கூட்டமைப்பு எம்.பி.,க்கள் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அப்போது, மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களில், பாதுகாப்பு படையினர் மீது, போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே, காஷ்மீரைப் பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இடம்பெறுவதாக இருந்த வடமேற்கு இங்கிலாந்தை சேர்ந்த லிபரல் ஜனநாயக கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் டேவிஸ் தன் நிபந்தனையை ஏற்க்காமல் தனக்கு அளித்த வந்த இடத்தை மோடி அரசாங்கம் மறுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரிஸ் டேவிஸ், “எனக்கு இதுபோல அழைப்பு கடிதம் வந்ததும், முதலில் ஆர்வமாக இருந்தது. பின்னர் என் பயணத்தின் போது இந்திய ராணுவத்தின் மேற்பார்வை இல்லாமல், காஷ்மீரில் தான் விரும்பிய இடங்களுக்கு எல்லாம் சென்று பார்க்கவும், விரும்பியவர்களை சந்தித்துப் பேசவும் சுதந்திரம் வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தேன்.

“காஷ்மீரில் பாசாங்கு செய்யும் மோடி அரசின் நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன்” : ஐரோப்பிய எம்.பி. ஆவேசம்!

ஆனால், இந்த நிபந்தனையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் மோடி அரசாங்கம் நிராகரித்தது. பின்னர் இந்தப் பயணத்திற்கு தேவைப்படுவோர் அனைவரும் கிடைத்துவிட்டதாகவும், எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்ப பெறுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். இந்த பதிலால் நான் ஆச்சரியமடைவில்லை. இந்த பயணம் பற்றி தெரியும்போதே நரேந்திர மோடியின் விளம்பர உத்தியாகவே எனக்கு இது தெரிந்தது.

பின்னர், மோடி அரசாங்கத்தில் காஷ்மீரில் எல்லாம் நன்றாக உள்ளது என பாசாங்கு செய்யும் அரசின் பிரசார நாடகத்தில் நான் பங்கேற்கமாட்டேன் என மின்னஞ்சல்கள் மூலம் தெரியப்படுத்தினேன். அங்கு ஜனநாயக மீறப்பட்டுள்ளது. அதை உலகம் உற்று நோக்கவேண்டிய தேவை உள்ளது.

இதன் மூலம் பல கேள்விகள் எழுகிறது. குறிப்பாக உள்ளூர் மக்களை ஏன் சுதந்திரமாக பேச பத்திரிகையாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏன் அனுமதி வழங்கவில்லை? மேலும், காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் எவ்வளவு குறைவாக கவனம் செலுத்துகிறதோ, அந்தளவுக்கு மோடி அரசு மகிழ்ச்சி அடையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories