திமுக அரசு

“ரூ.3,233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 5,000 பேருக்கு வேலை” : முதலமைச்சர் பேட்டி !

பல முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மிகவும் முனைப்போடு இருப்பது எங்களுக்கு தெரியவந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ரூ.3,233 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. 5,000 பேருக்கு வேலை” : முதலமைச்சர் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் தனது அரசு முறைப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (31.5.2023) இரவு சென்னை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உங்கள் வாழ்த்துகளோடு நான் மேற்கொண்ட சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. அந்தப் பயணத்தைப் பற்றி சுருக்கமாக உங்களுக்கு சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கும் ஜப்பானுக்கும், கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் நல்லுறவை பெறக்கூடிய வகையில் இந்தப் பயணம் அமைந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்களான மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவற்றை செயல்படுத்தியிருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் ஜப்பானின் பங்கும் அதில் இருக்கிறது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

உற்பத்தித் துறையில் உலகிற்கே முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு. அதே நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரும் உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் திராவிட முன்னேற்றக் கழக அரசினுடைய குறிக்கோள். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்த்திடக்கூடிய வகையில் ஏற்கனவே மாண்புமிகு தொழில்துறை அமைச்சராக இருந்த திரு. தங்கம் தென்னரசு அவர்களும் ஜப்பான் நாட்டிற்குச் சென்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தினார். குறைந்தபட்சம் 3000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்.

அந்த வகையில், முந்தைய தொழில்துறை அமைச்சர் நம்முடைய திரு. தங்கம் தென்னரசு அவர்களும், இன்றைய தொழில்துறை அமைச்சராக இருக்கக்கூடிய திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களும் , தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டு, பல ஜப்பான் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதில் முக்கிய திட்டமாகிய, 1891 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலையை மிட்சுபிஷி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே சென்னையில் என் முன்பு கையெழுத்திடப்பட்டது. அதையொட்டி,

ஹை-பி நிறுவனம் - 312 கோடி ரூபாய்

டைசெல் நிறுவனம் - 83 கோடி ரூபாய்

கியோகுட்டோ நிறுவனம் - 113.9 கோடி ரூபாய்

மிட்சுபா இந்தியா - 155 கோடி ரூபாய்

பாலிஹோஸ் டோஃபில் - 150 கோடி ரூபாய்

பாலிஹோஸ் கோஹ்யேய் - 200 கோடி ரூபாய்

பாலிஹோஸ் சட்டோ-ஷோஜி - 200 கோடி ரூபாய்

ஓம்ரான் ஹெல்த்கேர் - 128 கோடி ரூபாய் –

என மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவை மட்டுமல்லாமல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வித் திறன் பயிற்சிக்கும் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

பல்வேறு துறைகளுடைய பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்த தொழிற்சாலைகள் தூண்டுகோலாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும் சிங்கப்பூரிலும், ஜப்பானில் ஒஸாகா நகரத்திலும், டோக்கியோ நகரத்திலும் இருக்கக்கூடிய பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களினுடைய தலைவர்களையெல்லாம் சந்தித்தேன். , சிங்கப்பூர் நாட்டினுடைய சட்டம் மற்றும் உள்துறை அமைச்சரையும், தொழில் வர்த்தகத் துறை அமைச்சரையும் சந்தித்து தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு எதிர்கால திட்டங்கள் குறித்தும், இந்தியாவில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதையும் நான் எடுத்துரைத்திருக்கிறேன்.

இந்தச் சந்திப்பின்போது, மேலும் பல முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மிகவும் முனைப்போடு இருப்பது எங்களுக்கு தெரியவந்தது.

மேலும் தொடர்ந்து முயற்சி செய்து, இந்த நிறுவனங்களின் தொழில் முதலீடுகளையும் தமிழ்நாட்டுக்கு ஈர்த்திட தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தொழில்துறை அமைச்சரையும், தொழில்துறை அலுவலர்களையும் நான் வலியுறுத்தியிருக்கிறேன். இதையொட்டி, வருகிற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் நீங்களெல்லாம் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இந்த அழைப்பினை ஏற்று பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அதில் கலந்து கொள்வதாக உறுதி தந்திருக்கிறார்கள். இந்த மாநாட்டை சிறப்பாக நம்முடைய தமிழக அரசு நடத்த இருக்கிறது என்பதையும் உங்கள் மூலமாக நான் தெரிவித்துக் கொள்கிறேன். ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories