தி.மு.க

“நான் பேசியதை திரித்து புகார்.. முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயார்” - உதயநிதி ஸ்டாலின் பதில்!

சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்துப் பேசியது தொடர்பாக தி.மு.க இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

“நான் பேசியதை திரித்து புகார்.. முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயார்” - உதயநிதி ஸ்டாலின் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களை பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது பற்றி விமர்சித்தார்.

பா.ஜ.க தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில் இன்று 5 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி தனிப்பட்ட நபர்களை அவதூறாகப் பேசவில்லை என்றும், தனது தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில் திரித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

அவரது விளக்க கடிதத்தில், “என்னைப் பற்றி பிரதமர் மோடி, சீனியர்களை ஓரங்கட்டி குறுக்கு வழியில் பொறுப்புக்கு வந்ததாக தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் விமர்சித்தார். சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு குறுக்கு வழியில் பிரதமர் ஆனவர் நீங்கள்தான் என்று விமர்சித்து குஜராத் முதல்வரானதிலிருந்து பிரதமர் ஆகும் வரை ஓரங்கட்டப்பட்ட மூத்த தலைவர்கள் குறித்துப் பேசும்போது அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வேறொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவருக்கு பதிலளித்தேன்.

அதில் நான் பேசிய முழு தமிழ் வார்த்தைகள் வேறு. தங்களிடம் புகாராகக் கொண்டுவரப்பட்டது வேறு. பேச்சின் முழு தமிழ் வார்த்தைகளையும் அளித்தால் சரியாக இருக்கும். நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள அழுத்தம் என்கிற வார்த்தையை நான் உபயோகப்படுத்திய விதம் வேறு. ஆனால், தவறாக அர்த்தம் கற்பித்துப் புகார் அளித்துள்ளனர். தான் பிரதமர் ஆக மூத்த தலைவர்கள் தலையெடுக்கா வண்ணம் அழுத்தம் கொடுத்தார் என்பதாகவே பேசினேன்.

அதேபோல் தொல்லை என்கிற வார்த்தையும் அதன் சரியான அர்த்தத்தின்படி புகாராக அளிக்கப்படவில்லை. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் அவர்களது சொந்த வாழ்க்கையை விமர்சிக்கவில்லை. நான் தாராபுரத்தில் என்ன பேசினேன் என்பதை ஏப்.2 அன்று சிங்காநல்லூர் கூட்டத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளேன்.

ஆகவே, என்னுடைய இரண்டு வார்த்தைகளை வைத்து என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான், மறைந்த சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர்கள் ஆற்றிய பணியை பெரிதும் மதிக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்தால் முழு பேச்சின் சாராம்சத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories