தேனிக்கு வருகை தந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்த பெண்ணின் குழந்தைக்கு 24 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரது குடும்பத்தினர் தி.மு.க தலைவருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இக்கூட்டத்தில், பெரியகுளம் தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரத்தினம் நகரில் குடியிருக்கும் டிப்பர் லாரி டிரைவர் கார்த்திக் என்பவரின் மனைவி நந்தினி கலந்துகொண்டு கோரிக்கை மனு அளித்தார்.
மனு குறித்து கூட்டத்தில் அவர் பேசும்போது, தனது ஒன்றரை வயது மகள் யாழினியின் இருதயத்தில் ஓட்டை விழுந்து விட்டதால் சிகிச்சை அளிக்க போதிய பொருளாதாரம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்காக ரேஷன் கார்டு கேட்டும், காப்பீடு அட்டை கேட்டும் பலமுறை அரசிடம் முறையிட்டும் நடக்கவில்லை என்றும், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் எனக்கு குடும்ப அட்டை, காப்பீடு அட்டை வழங்கி குழந்தையின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்த அரசுக்கு 24 மணி நேரம் கால அவகாசம் தருகிறோம். 24 மணி நேரத்திற்குள் நந்தினிக்கு குடும்ப அட்டை, காப்பீடு அட்டை வழங்குவதோடு குழந்தைக்கு தேவையான சிகிச்சைக்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தி.மு.க நேரடியாக உதவி நடவடிக்கையில் இறங்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மாலை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரத்தினம் நகரில் குடியிருக்கும் நந்தினியின் வீட்டிற்கு சென்று விசாரித்தார். அப்போது நந்தினி இன்று காலை குடும்ப அட்டையும் காப்பீடு அட்டையும் வழங்கியுள்ளனர்.
மேலும் நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் சிகிச்சைக்குச் செல்ல எங்களிடம் பணமில்லை என்று கூறியதற்கு அரசு பண உதவி செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நீங்கள் கோரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் காப்பீடு அட்டை மற்றும் குடும்ப அட்டை கிடைத்துள்ளது. சிகிச்சை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது.
சிகிச்சைக்குச் செல்ல ரூ.10 ஆயிரம் வழங்குகிறோம். சிகிச்சை பெறும் இடத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். தி.மு.க என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு உதவியாக இருப்பார்” என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் தி.மு.கழகத்திற்கும், தி.மு.க தலைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். அ.தி.மு.க அரசியம் பலமுறை மனு அளித்தும் கிடைக்காத உதவி, தி.மு.க தலைவரிடம் கோரிக்கை விடுத்த ஒரே நாளில் கிடைத்துள்ளது அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.