தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 43-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெரியார் நினைவிடத்திலும், சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களிலும் மலர்தூவி மரியாதை செலுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.
பின்னர் கோபாலபுரம் கலைஞர் இல்லத்திற்குச் சென்று முத்தமிழறிஞர் கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கீழ்ப்பாக்கம் பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்திற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேராசிரியரின் உருவப்படத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
முன்னதாக, “நிவர் புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதும், நிவாரணப் பணிகள் செய்வதும் தான் உண்மையான கொண்டாட்டம். இதுதான் தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் நமக்குக் கற்றுத்தந்த பாடம்.
இதை மனதிற்கொண்டு, எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டுவது, ஆடம்பர பேனர்கள் வைப்பது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிர்த்து, கனமழை பெய்யும் இடங்கள் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இளைஞரணியினர் நிவாரணம் - மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தியிருந்தார் உதயநிதி ஸ்டாலின்.
அதன்படி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் இன்று நலத்திட்ட உதவிகள், நிவாரணப் பணிகள் வழங்கப்பட்டு சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.