கொரோனா பேரிடர் சூழலில் ஊரடங்கால் முடங்கியுள்ள ஏழை எளிய மக்கள் இன்னல்களில் இருந்து மீள்வதற்காக தி.மு.க. சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு, அதன்கீழ், நிவாரணப் பொருட்கள், அத்தியாவசிய தேவைகளான மருந்துகள் என அனைத்தும் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகிறது.
இவை அனைத்தையும், தினந்தோறும் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொளிக் காட்சி மூலம் கேட்டறிந்து, ஆலோசனைகள் அளித்து வருகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். பொதுமக்கள் உதவி எண்ணும் அமைக்கப்பட்டு அதன் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் உதவி எண் பயனாளிகளிடம் உரையாடினார்.
அப்போது, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதை கண்டித்து தமிழகம் முழுக்க தி.மு.க முன்னெடுப்பில் நடைபெற்ற போராட்டம் குறித்தும், ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் விளக்கினார்.
மேலும் பேசிய அவர் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் 12 லட்சம் தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், லட்சக் கணக்கானோருக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பொதுமக்கள் உதவி எண் மூலமாக அழைத்து பயன்பெற்ற பொதுமக்கள் பலர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அவரோடு காணொளிக் காட்சி மூலம் உரையாடினர்.
அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் பயன்பெற்று, தி.மு.க தலைவருக்கும், உதவிகள் புரிந்த தன்னார்வலர்களுக்கும் மனமார நன்றி தெரிவித்துள்ளனர்.