தி.மு.க

“தமிழ்நாடு வாழ்க” - அண்ணா தலைமையில் சட்டமன்றம் முழங்கிய நாள் இன்று - தமிழர் வரலாற்றில் முக்கியமான நாள் !

‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டுவதற்கான தீர்மானத்தைப் பேரவையில் தாக்கல் செய்து அன்றைய முதல்வர் அண்ணா உரையாற்றிய தினம் இன்று.

“தமிழ்நாடு வாழ்க” - அண்ணா தலைமையில் சட்டமன்றம் முழங்கிய நாள் இன்று - தமிழர் வரலாற்றில் முக்கியமான நாள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, மதராஸ் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டவேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ம் ஆண்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்தார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மணிமண்டம் எழுப்பப்பட்டது.

1957ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முதன்முறையாக வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் என காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை.

1967ம் அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தபிறகுதான் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. அதற்கான தீர்மானத்தைப் பேரவையில் தாக்கல் செய்து அன்றைய முதல்வர் அண்ணா உரையாற்றிய தினம் இன்று.

அண்ணா தாக்கல் செய்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேறியது. அதைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் ஒரு அதிசயத்தையும் நிகழ்த்திக் காட்டினார் பேரறிஞர் அண்ணா.

தம் இருக்கையிலிருந்து எழுந்த அண்ணா, பேரவைத் தலைவர் ஆதித்தனாரை நோக்கி, “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில், ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதும், ‘வாழ்க’ என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி கோருகிறேன்” என்றார்.

பேரவைத் தலைவர் ஒப்புதல் அளித்தபிறகு, அண்ணா, “தமிழ்நாடு” என்று மூன்று முறை சொல்ல, ஒவ்வொரு முறையும் அனைத்து உறுப்பினர்களும் “வாழ்க... வாழ்க” என முழக்கமிட்டனர். தமிழகச் சட்டமன்ற வரலாற்றில் இத்தகு முழக்கம் ஒலித்தது அதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories