உலகம்

X தளத்துக்கு வரும் புதிய பயனர்கள் இனி கட்டணம் செலுத்தவேண்டும் : எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி திட்டம் !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். இதற்கு மேலாக ட்விட்டர் நிறுவனத்தின் பெயரையே 'X' என மாற்றி அதிரடி காட்டினார்.

இந்த நிலையில், புதிய பயனர்களுக்கு குறிப்பிட்டத் தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்ற புதிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. X நிறுவனம் கடந்த சில மாதமாக நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், அதன் லாபத்தை அதிகரிக்கும் வகையில், புதிதாக X கணக்கைத் தொடங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் குறிப்பிட்டத் தொகையைக் கட்டணமாக விதிக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கட்டணம் செலுத்தாத நபர்களுக்கு எக்ஸ் தளத்தின் ட்வீட்களைப் பார்க்கவும், ஃபாலோ பண்ணவும் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் போஸ்டுகளைப் பதிவிடவும், கமென்ட் செய்யவும் அனுமதி வழங்கப்படாது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்தத் திட்டம் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: ஆட்சி மாற்றத்திற்கு பின் EVM, PM Cares குறித்த தகவல்கள் வெளிவரும் : பரகலா பிரபாகர்!