உலகம்

"இளம் வயதினரை போதைக்கு தூண்டும் சமூக வலைதளங்கள்" - மெட்டா நிறுவனம் மீது அமெரிக்காவில் குவிந்த புகார்கள் !

தற்போதுள்ள இந்த இணைய உலகில், நாம் அனைத்தையும் இணையவழியாகவே பெற முடிகிறது. தகவல் பரிமாற்றம் கூட நம்மால் இணைய வழியில் எளிமையாக செய்ய முடிகிறது. இது போன்ற செயலிகள் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது.

இது போன்ற செயலிகளை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க் ஜூக்கர்பர்க்கால் தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம் தற்போது இந்த சமூகவலைதள உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பேஸ்புக் நிறுவனம் தனது சேவையோடு நிறுத்திகொள்ளாமல் வாட்ஸ்அப் போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மேலும், தனக்கு கீழ் செயல்படும் பேஸ்புக், வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கினார் மார்க் ஜூக்கர்பர்க்.

இந்த மெட்டா நிறுவனத்தின் வருவாய் காரணமாக உலகபணக்காரர் வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் இடம்பெற்றுள்ளார். மேலும், உலகின் முக்கிய நபர்களில் ஒருவராக இதன்மூலம் மார்க் ஜூக்கர்பர்க் உயர்ந்துள்ளார். இதனால் அவரின் பாதுகாப்புக்காக 10 மில்லியன் டாலர்களை மெட்டா நிறுவனம் செலவு செய்கிறது.

இந்த நிலையில், மெட்டா நிறுவனத்தின் மீது அமெரிக்காவில் உள்ள 33 மாகாணங்களில் இளைஞர்களின் மனநல நெருக்கடிக்கு பாதிக்கப்படுவதாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் தனது செயலிகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் மூலம் இளம் வயதினரை போதைக்கு தூண்டியுள்ளதாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாகாணங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த புகார்கள் கலிபோர்னியா ஃபெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் செயலிகளை அதிகளவில் இளைஞர்கள் பயன்படுத்துவதால் அவர்களுக்கு மனச்சோர்வு, பதட்டம், தூக்கமின்மை, கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையில் குறுக்கீடு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த ஆய்வு முடிவுகளும் அதில் சமர்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் : திடீரென என்ஜினை நிறுத்த முயன்ற விமானி - இறுதியில் நடந்தது என்ன ?